திருப்பூர் மாவட்டம் அவிநாசியைச் சேர்ந்தவர் பழனிக்குமார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி சுபஶ்ரீ, ஒரு பனியன் கம்பெனியில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 11 வயதில் மகள் உள்ளார்.
இந்நிலையில், சுபஶ்ரீ கடந்த 11ம் தேதி காலை கோவை பூண்டி அருகே உள்ள ஈஷா யோகா மையத்துக்கு ஒருவாரகால பயிற்சிக்கு சென்றுள்ளார். பயிற்சி முடிந்து 18-ம் தேதி அவர் வீடு திரும்பியிருக்க வேண்டும்.
ஆனால் சுபஶ்ரீ வரவில்லை. இதுதொடர்பாக பழனிக்குமார் ஆலந்துறை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து பழனிக்குமார் கூறுகையில், "கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே என் மனைவி ஈஷா யோகா மையம் நடத்திய ‘Silence’ பயிற்சியில் கலந்து கொண்டார்.
அதேபோல தான் இந்தமுறையும் கலந்து கொண்டார். 11-ம் தேதி காலை 6மணி அளவில் நான்தான் அவரை ஈஷா யோகா மையத்தில் விட்டேன்.
அவரை அழைத்து வருவதற்காக 18-ம் தேதி காலை மீண்டும் ஈஷா சென்றேன். 11 மணிக்கு பயிற்சி முடிந்து வெளியில் வந்திருக்க வேண்டும். அவர் வராததால், 3 மணி அளவில் நான் உள்ளே சென்று விசாரித்தேன். அப்போது வகுப்பு முடிந்து எல்லோரும் சென்றுவிட்டதாக கூறினர்.
அங்கிருந்த சி.சி.டி.வி ஆய்வு செய்ததில், என் மனைவி காலை 9.30 மணிக்கு வகுப்பு முடிந்து சர்ப்ப வாசல் வழியாக வெளியே சென்றுள்ளார். எனது செல்போனுக்கு ஒரு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்திருந்தது. எடுக்க முடியாததால் மீண்டும் அந்த எண்ணுக்கு நான் அழைத்தேன்.
அதில் பேசியவர், ‘என் கணவருக்கு பேச வேண்டும் என்று ஒரு பெண் என்னிடம் போன் வாங்கினார். போன் எடுக்காததால் திருப்பிக் கொடுத்து சென்றுவிட்டதாக கூறினார். மேலும் என் மனைவி ஒரு காரில் லிஃப்ட் கேட்டு, செம்மேடு முட்டத்துவயல் பகுதியில் இறங்கியுள்ளார்.
அதன் பிறகு அவரை யாரும் பார்த்ததாக தெரியவில்லை. அக்கம் பக்கம் யாரிடம் கேட்டும் மனைவியைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. அதனால்தான் போலீஸில் புகார் அளித்துள்ளேன்.” என்றார்.
பயிற்சிக்காக ஈஷா யோகா மையம் சென்று சுபஶ்ரீ, கையில் ஒரு பை, செல்போன் ஆகியவற்றை எடுத்து சென்றுள்ளார். இந்நிலையில் வெளியே வரும்போது கையில் எதுவும் இல்லாமல் வெள்ளை நிற உடையில் சுபஶ்ரீ சாலையில் ஓடும் சி.சி.டி.வி காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
சுபஶ்ரீ எதற்காக அவசரமாக வெளியில் ஓடினார், அவர் எங்கே சென்றார் என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/h6aFo9N
via
