புதுவையில், மணவெளி தொகுதி காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய எம்.பி வைத்திலிங்கம், "முதலமைச்சர் ஒன்றும் செய்ய முடியவில்லை, என நீதிபதியிடம் கேட்கிறார். யாரிடம் கேட்க வேண்டுமோ? அவரிடம் கேட்கவில்லை. ரங்கசாமி கேட்கவேண்டிய இடத்தில் கேட்கவில்லை, தப்பான இடத்தில் கதவை தட்டுகிறார். அப்படியென்றால் ரங்கசாமி மக்களை ஏமாற்றுகிறார் என அர்த்தம். அவர் அதிகாரிகள் மீது பழிபோடுகிறார்.
அதிகாரிகள் என்ன செய்வார்கள்... கவர்னர், மத்திய அரசை காரணம் சொல்ல அவர் மறுக்கிறார். ஆனால், அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை என கூறுகிறார். அவர் முதலமைச்சர் தானே? அவரின் அதிகாரம் எங்கே போனது? வாக்காளர்களாகிய மக்கள் ஏமாந்துவிட்டனர். மோடிக்கு புதுவையே தெரியாது. புதுவையில் பாஜக கிடையாது. அதை இறக்குமதி செய்தது ரங்கசாமி. ரங்கசாமி இல்லாவிட்டால் புதுவையில் பாஜக இல்லை. 'மோடியை நம்பி ஓட்டு போடுங்கள்' என கூறியவர் ரங்கசாமி. இவர்களால்தான் நமக்கு ஆட்சி போனது.
கட்டபொம்மன் வீழ்த்த முடியாத மன்னன். அவனை காட்டிக்கொடுத்தது எட்டப்பன். புதுவையில் 8 எட்டப்பன்கள் சேர்ந்து காங்கிரஸை வீழ்த்தினார்கள். அந்த 8 எட்டப்பன்களும் ரங்கசாமியை இப்போது உதைக்கின்றனர். அந்த உதையை வாங்கிக்கொண்டு, வலித்தாலும் நாற்காலியை விட்டுக்கொடுக்காமல் இருப்பவர் ரங்கசாமி. இதை மக்களிடம் சொல்ல வேண்டிய வேலை காங்கிரஸுக்குத்தான் உள்ளது. புதுவையில் அதிமுக படுத்துவிட்டது. நமது கூட்டணியும் வேகமாக செயல்படவில்லை. எதையும் எதிர்பார்க்காமல் செயல்படும் காங்கிரஸ் கட்சிதான் வேகமாக செயல்பட வேண்டும். நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது. காங்கிரஸ் மட்டுமே துணிந்து நிற்கும் கட்சியாக உள்ளது.
புதுவையில் குழந்தைக்கு பால் தட்டுப்பாடு. ஆண்கள் மது குடித்து அழிந்துவிட்டனர். பெண்கள் விதவைகளாலும் நிலையில் இருக்கிறார்கள். அவர்களையும் அழிக்க பிராந்தி கடையில் பெண்களுக்கு இலவச மது வழங்குகின்றனர். முதலமைச்சரிடம், இப்படி கடைகளை திறப்பது நியாயமா? என கேட்டால், "எனக்காக செய்யவில்லை, மக்களுக்காக செய்கிறேன். ரூ.1000 கொடுக்க என்னிடம் காசு இல்லை. மற்ற திட்டங்களுக்கு காசு இல்லை. இதிலிருந்துதான் பணம் தருகிறேன்" என்கிறார். குடும்பத்தை அழித்துவிட்டு ரூ.1000 வழங்குவதில் என்ன பயனுள்ளது?” என்றார் காட்டமாக.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/jPUIGom
via
