பிரான்ஸ் நாட்டிலிருந்து `எம்.எஸ். அமிரா' என்ற பயணிகள் கொகுசுக் கப்பல், கடந்த மாதம் 22-ம் தேதி 698 சுற்றுலாப் பயணிகளுடன் புறப்பட்டது. வரும் ஏப்ரல் 26-ம் தேதி வரை 125 நாட்களில் 25 நாடுகளுக்குச் செல்லும் இந்தக் கப்பல், கடந்த 28-ம் தேதி கொச்சி துறைமுகத்திலிருந்து புறப்பட்டு கடந்த (11-ம் தேதி) தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு வந்தடைந்தது.
கப்பலை விட்டு இறங்கிய சுற்றுலாப் பயணிகளுக்குத் தமிழர்களின் பாரம்பரிய வாத்தியங்களான நாதஸ்வரம், தவில் இசை முழங்க ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, கரகாட்டத்துடன் கூடிய உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், அவர்கள் தூத்துக்குடி, மணப்பாடு மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்கள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களை பேருந்துகளில் சென்று பார்வையிடுகின்றனர். பின்னர் இங்கிருந்து இலங்கைக்கு செல்ல உள்ளது. இது குறித்து பேசிய துறைமுக ஆணையத்தின் தலைவர் ராமசந்திரன், ” எம்.எஸ்.அமிரா என்ற இந்த பயணிகள் சொகுசுக் கப்பலில் 835 பயணிகள் வரை பயணிக்கலாம்.
ஜெர்மனி, ஆஸ்திரேலியா, இத்தாலி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து 698 பயணிகள் பயணிக்கிறார்கள். இவர்களுடன் 386 மாலுமிகளும் பயணிக்கிறார்கள். இக்கப்பல் 204 அடி நீளம், 92அடி உயரம் 13 அடுக்குகளுடன் உடையது. இதில், 413 அறைகள் மற்றும் நீச்சல் குளம், நூலகம், பூங்கா உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் அடங்கியுள்ளது.
25 நாடுகளில் உள்ள சுற்றுலாத் தலங்கள், பிரசித்தி பெற்ற கோயில்களைக் காண்பதற்காக 125 நாட்கள் சுற்றுலாவாக வந்துள்ளனர். பல்வேறு நாட்டிலிருந்து வரக்கூடிய சுற்றுலா பயணிகளின் சொகுசுக் கப்பலை நிறுத்திட பிரத்யேக பெர்த் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
இதே போல இலங்கையில் இருந்து பயணிகள் கப்பல் ஒன்று 2 மாதத்திற்குள் தூத்துக்குடிக்கு வர உள்ளது. இது ஒரு ஆரம்ப நிலைதான். இன்னும் பல்வேறு சுற்றுலாப் பயணிகள் கப்பல்கள் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வர வாய்ப்புள்ளது” என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/HuQMfxd
via
