
தமிழ் சினிமா மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி, தற்போது பல மொழிகளிலும் பிரபல நட்சத்திரமாக வலம் வருபவர் பிரியங்கா சோப்ரா.
அதுமட்டுமின்றி தொழிலதிபராகவும், தயாரிப்பாளராகவும் கவனிக்கத் தக்க வகையில் செயல்பட்டு வருபவர். இந்நிலையில் அவர் தயாரித்த ஆவணப்படம் ஒன்று ஆஸ்கார் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 'To kill a tiger' என்ற ஆவணப்படம் நிஷா பஹுஜா என்பவரால் இயக்கப்பட்டுள்ளது. ரஞ்சித் என்ற நடுத்தர வயது விவசாயி, தனது 13 வயது மகள் கிரண் மீது நிகழ்த்தப்பட்ட கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு நீதி வேண்டிப் போராடுவதே இதன் கதை.
இக்கதை ஜார்கண்ட் மாநிலம் பெரோ மாவட்டத்தில் நிகழ்வதாகக் காட்டப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படம் இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள 96வது ஆஸ்கர் இறுதிக்கட்ட பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட 'To kill a tiger' என்ற ஆவணப்படத்தின் குழுவில் அங்கமாக இருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். மேலும், இதன் உலகளாவிய விநியோக உரிமையை நெட்ஃபிலிக்ஸ் பெற்றுள்ளது என்பதை அறிவிப்பதில் நான் மிகவும் பெருமிதம் கொள்கிறேன் .
இந்த ஆவணப்படத்தை நிஷா பஹுஜா இயக்கியுள்ளார். 2022ல் இந்தப் படத்தை நான் முதன்முதலில் பார்த்தபோது, தன் மகளுக்கு நீதி கிடைக்கப் போராடும் ஒரு தந்தையின் துணிச்சல் என்னை வெகுவாக கவர்ந்தது. இப்படம் ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையே உள்ள பாசப் பிணைப்பையும், அன்பின் ஆழத்தையும் கூறுகிறது.
இந்தக் கலை பொக்கிஷம் சமூகத்தின் பல்வேறு படி நிலைகளில் உள்ள வீடுகளின் நிலையைக் காட்டுகிறது. இக்கதையின் தந்தையும் மகளும் எங்கே வாழ்கிறார்களோ, அதே ஜார்கண்ட் மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன். பார்ப்போரின் மனதை உலுக்கும் இக்கதையை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் காண வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.
from விகடன்
Umn news
