100-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று, ஹாஸ்டலில் க்வாரன்டீன்... சென்னை ஐ.ஐ.டி நிலவரம் என்ன?

0

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்பது மாதங்களாக மூடப்பட்டிருந்த உயர் கல்வி நிறுவனங்கள் கடந்த 7-ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டன. அடுத்த கட்டமாக பள்ளிகளைத் திறப்பதற்கு தமிழக அரசு ஆலோசனை நடத்திவரும் வேளையில், சென்னை ஐ.ஐ.டி-யில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஐ.ஐ.டி-யில் விடுதியில் தங்கியிருந்த ஆராய்ச்சி மாணவர்கள் 66 பேருக்கும் 5 ஊழியர்களுக்கும் என மொத்தம் 71 பேருக்கு முதல்கட்டமாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

ஐ.ஐ.டி சென்னை

அதைத் தொடர்ந்து ஐ.ஐ.டி-யில் உள்ள விடுதிகளில் தங்கியுள்ள அத்தனை மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விடுதிகளில் தங்கியுள்ள 774 மாணவர்களில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதில் மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஆக மொத்தம் 104 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ``யாரும் அச்சமடைய வேண்டாம். இதனை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும்" என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில், சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் சிலரை தொடர்புகொண்டு பேசினோம். ``சில நாள்களுக்கு முன்பு ஒரு ஹாஸ்டலில் மட்டும் நிறைய பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நிறைய பேருக்கு `பாசிட்டிவ்’ என ரிசல்ட் வந்தது. அதனையடுத்துதான் பரிசோதனைகளை அதிகப்படுத்தினர். அதன்பிறகுதான் நிறைய விடுதிகளில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதே தெரியவந்தது.

ஆரம்பத்தில் குறைவான மாணவர்கள்தான் இருந்தோம். விடுதியில் எல்லோருக்கும் தனித்தனி அறைகள் கொடுக்கப்பட்டன. தனித்தனி கழிவறைகளைத்தான் பயன்படுத்தினோம். எல்லோரும் கவனமுடன்தான் இருந்தோம். மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபோது தனித்தனி அறையோ கழிவறையோ சாத்தியமில்லாமல் போனது. மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே தனி கழிவறை கொடுக்கக் கூடிய சூழல்.

Representational Image

இன்னொரு பக்கம் ஒரே ஒரு மெஸ் மட்டுமே செயல்பட்டது. எனவே மாணவர்கள் எல்லோரும் அங்கு சேர்ந்து சென்று வர வேண்டிய சூழல். அதேபோல, கடந்த சில மாதங்களுக்கு முன்பு யாரும் ஐ.ஐ.டிக்குள் நுழைய கட்டுப்பாடுகள் இருந்தது. ஆனால், அண்மையில் `புராஜெக்ட் ஸ்டாஃப்ஸ்’ நிறைய பேர் வெளியில் இருந்து வந்து சென்றார்கள். எனவே இப்படியான சூழலில் எப்படி யார் மூலம் இந்தளவுக்கு கொரோனா பரவியது என்று தெரியவில்லை.

ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட சிலரைத் தவிர, மற்றவர்களுக்கெல்லாம் அறிகுறியில்லா (Asymptomatic) தொற்றுதான் என்பதால் விடுதிகளில் எந்தவிதமான பீதியும் இல்லை. தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் சிகிச்சைக்காக வெளியில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மற்றவர்கள் ஹாஸ்டலிலேயே க்வாரன்டீன் செய்யப்பட்டிருக்கிறோம். வெளியிலிருந்து யாரும் உள்ளே அனுமதிக்கப்படுவதும் இல்லை. உள்ளிருந்து யாரும் வெளியே செல்லவும் அனுமதிக்கப்படவில்லை. எங்களது அறைக்கே உணவு கொண்டு வந்து கொடுத்துவிடுகிறார்கள். எங்களிடையே பதற்றமோ பீதியோ இல்லை” என்றனர்.

இதுதொடர்பாக டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ள ஐ.ஐ.டி நிர்வாகம், ``விடுதிகளில் பத்து சதவிகித மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுள்ளனர். அவர்கள் அனைவரும் லேப் வசதி தேவைப்படக் கூடிய ஆராய்ச்சி மாணவர்கள் என்பதால்தான் அவர்களை அனுமதித்திருந்தோம். ஆகஸ்ட் மாதம் முதலே லேப் வசதி தேவைப்படக் கூடிய ஆராய்ச்சி மாணவர்களை அனுமதித்து வருகிறோம். அப்படி வரும் மாணவர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்வதற்கான வசதியையும் ஏற்பாடு செய்துள்ளோம். அரசு அளித்துள்ள தளர்வு விதிகளைப் பின்பற்றி சில புராஜெக்ட் பணியாளர்கள் மட்டும் வெளியிலிருந்து இங்கு வந்து பணி செய்துவிட்டுச் செல்கிறார்கள்.

Corona

விடுதியில் தங்கியிருந்த மாணவர்களில் ஒருசிலருக்கு கொரோனா தொற்றின் அறிகுறி தெரிய வந்ததும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு விடுதியில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களையும் அவர்களது அறையிலேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம். அவர்களது அறைக்கே சென்று உணவுகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி விடுதி மாணவர்களிடையே பரவியுள்ள கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு சுகாதரத்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து உரிய நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். கொரோனா தொற்று உறுதியான மாணவர்கள் கிண்டியில் உள்ள கோவிட்- கேர் சென்டரில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் நலமுடன் இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/2INDH15
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*