மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். முதல்முறையாக தேர்தலில் களம் காணும் அவர், நேற்று வேட்புமனுத்தாக்கல் செய்தார். அப்போது நடந்த சம்பவங்களின் தொகுப்பை இங்கு காணலாம்.
முன்னதாக, பா.ஜ.க சார்பில் அவரை எதிர்த்து போராடும், அந்தக் கட்சியின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் நேற்று வேட்புமனுத்தாக்கல் செய்தார். அப்போது அவர், ``ஸ்க்ரீனில் வந்துவிட்டால் மட்டும் போதாது. ஏப்ரல் 6-க்கு பிறகு கமல் புதிய படத்துக்கோ, அடுத்த பிக்பாஸ் சீஸனுக்கோ தயார் ஆகிடுவார்” என்று சாடியிருந்தார்.
கமல் வருவதற்கு முன்பே, வேட்புமனு தயாரிக்கும் பணிகளில் மய்ய நிர்வாகிகள் ஈடுபட்டிருந்தனர். தனிவிமானம் மூலம் கோவை வந்த கமல், 2.15 மணி அளவில் கோவை தெற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியின் (மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகம்) அலுவலகத்துக்கு வந்தார்.
கமல் வருகிறார் என்றதும் மாநகராட்சி ஊழியர்கள் அவரைப் பார்ப்பதற்கு அதிக ஆர்வம் காட்டினர். பணிகளுக்கு பிரேக்விட்டு, அனைவரும் தங்களது மொபைலுடன் கமலை போட்டோ எடுக்க காத்துக் கொண்டிருந்தனர்.
Also Read: அ.தி.மு.க., தி.மு.க-வை அசைத்துப் பார்க்குமா கமல் கூட்டணி?
உள்ளே வந்த கமல் எல்லோருக்கும் சிரித்தபடியே வணக்கம் வைத்து தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்குள் சென்றார். அவருடன் இரண்டு பேர் மட்டும் வந்திருந்தனர். உட்கார்ந்தபடியே கமல்ஹாசன் வேட்புமனுவை, அதிகாரியிடம் வழங்கினார். அவ்வபோது, அதிகாரி சில கேள்விகளை எழுப்பினார். கமலுடன் வந்திருந்தவர்கள் அதற்கு பதில் அளித்தனர்.
மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் டாக்டர் மகேந்திரன் தேர்தல் அலுவலர் அறைக்கு செல்ல முயற்சித்தார். ஆனால், ஏற்கெனவே இருவர் உள்ளே இருப்பதால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சிறிது நேரத்தில் அறையில் இருந்து ஒருவர் வெளியில்வர, மகேந்திரன் உள்ளே சென்றார்.
கமல் செய்தியாளர்களை சந்திக்கும் இடத்தில் கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருந்தது. போலீஸார் அங்கே வந்து, ஊடகங்களை தவிர மய்யம் ஐ.டி விங் டீம் உள்ளிட்ட அனைவரையும் விரட்டினர். வேட்புமனுத்தாக்கல் செய்து வெளியில் வந்த கமலுடன் செல்ஃபி எடுக்க மாநகராட்சி ஊழியர்கள் பலர் முயற்சி செய்தனர்.
ஆனால், கமல் யாருடனும் செல்ஃபி எடுக்கவில்லை. செய்தியாளர்களை சந்திக்கும்போது, ‘என் பின்னால் யாரும் நிக்க வேண்டாம்’ என்று உத்தரவுபோட்டுவிட்டு பேசத் தொடங்கினார்.
“நேர்மை தான் எங்கள் தேர்தல் வியூகம். எங்களிடம் இருக்கும் அந்த நேர்மை, அவர்களிடம் இருக்காது (பா.ஜ.க) என நினைக்கிறேன். 234 தொகுதிகளையும் ஒன்றாகதான் பார்க்கிறேன். கோவையில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கின்றனர். முக்கியமாக, இங்கே மதநல்லிணக்கம் இல்லாமல் செய்ய முயற்சிகள் நடந்து வருகின்றன. அதற்கு எதிரான குரலாக இருக்க நினைக்கிறேன். கோவையின் புகழ் மங்காமல் இருக்க, அதை மீட்டெடுக்க இங்கே போட்டியிடுகிறேன்.
கோவையில் விமானநிலைய விரிவாக்கம், சாலை விரிவாக்கம் பணிகள் முடிக்கப்படாமல் இருக்கின்றன. அவற்றை எல்லாம் செய்து, இதை இந்தியாவின் முன்மாதிரி பகுதியாக செய்துகாட்ட முடியும். என்னை வெளி ஆளாக மக்கள் பார்க்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.
இனி முடிந்தவரை இங்கு மையம் கொண்டுதான், மற்ற இடங்களுக்கு பிரசாரம் செய்யப் போகிறேன். டாக்டர் பணி செய்து கொண்டிருப்பவர், மே 2-க்கு பிறகு அந்தப் பணியை செய்யக் கூடாதா. எங்களுக்கு வேறு தொழில் இருக்கிறது. அரசியல் எங்கள் தொழில் இல்லை. அரசியல் எங்கள் கடமை. அதையும் செய்வோம். மற்றதையும் செய்வோம்” என்று வானதிக்கு பதிலடி கொடுத்தார்.
கமல் தனது வேட்புமனுவில் அளித்துள்ள விபரங்கள்படி அவருக்கு ரூ.131.8 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகளும், ரூ.45 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகளும் என மொத்தம் ரூ.176.9 கோடி சொத்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும். ரூ.49.5 கோடிக்கு கடன் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3vuoy8f
via
