சரக்குப் பெட்டக மாற்று முனைய துறைமுகம் வருமா, வராதா என்ற பிரசாரம் கன்னியாகுமரி தேர்தல் களத்தில் தீவிரமடைந்து வருகிறது. இந்த துறைமுகம் அமைக்கப்பட்டால், மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கருத்து பரவலாக நிலவுகிறது. அ.தி.மு.க கூட்டணி இந்த துறைமுகம் வராது என்கிறது. தி.மு.க கூட்டணியோ, அ.தி.மு.க-வினர் நாடகமாடுவதாக கூறுகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியும், கன்னியாகுமரி தொகுதி அ.தி.மு.க வேட்பாளருமான தளவாய் சுந்தரம் நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்``கன்னியாகுமரி துறைமுகத் திட்டத்துக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், இந்நாள் முதல்வர் எடப்பாடியும் தடையில்லா சான்றிதழ் வழங்கவில்லை. தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து, சரக்குப்பெட்டக துறைமுகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம என அறிவிப்பு வெளியானது. முதல்வர், மத்திய அமைச்சரிடம் பேசியதால், அந்த துறைமுகத் திட்ட அறிவிப்பை ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் வந்துள்ளது.
மக்களுக்கு விரோதமான திட்டங்களுக்கு எதிராக நாங்கள் மத்திய அரசிடம் குரல் கொடுப்போம். மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை மூலம் தூத்துக்குடி சீப் இன்ஜினியர் கொடுத்த அறிவிப்பை ரத்து செய்துவிட்டார்கள். எனவே சரக்குப்பெட்டக துறைமுகம் வராது. குமரி மீனவ மக்களை பாதிக்கும் திட்டங்களை கொண்டுவரமாட்டோம் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. மீனவ மக்களை பாதிக்கும் வகையில் எந்த திட்டமும் கொண்டுவரமாட்டோம். டெண்டர் குறித்த தூத்துக்குடி போர்ட் சேர்மன் அறிவிப்பையும் ரத்துச்செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி துறைமுகம் தூத்துக்குடிக்கு போய்விட்டது என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது பற்றி அவருக்குத்தான் தெரியும். டெண்டர் அறிவிப்பை ரத்துச் செய்ய நாங்கள் கோரிக்கை வைத்தோம். அதை ரத்துச் செய்துவிட்டார்கள். டெண்டர் அறிவிப்பு வந்தது போர்ட் ட்ரஸ்டின் நடைமுறை. இதை அரசியல் ஆக்கக்கூடாது. அந்த திட்டத்துக்கு மாநில அரசு என்.ஓ.சி கொடுக்கவில்லை. மக்களுக்கு விரோதமான திட்டத்தை கொண்டுவரமாட்டேன் என முதல்வர் கூறியுள்ளார்.” என்று தெரிவித்தார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3tP2kft
via
