தென்காசி: `கண்டா வரச் சொல்லுங்க’ - ஃபேஸ்புக்கில் பதிவிட்டவரை நேரில் சந்தித்த தனுஷ்குமார் எம்.பி!

0

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள நயினாரகரம் கிராமத்தைச் சேர்ந்தவர், சரவணன். அ.தி.மு.க அனுதாபியான இவர், சில தினங்களுக்கு முன்பு தனது முகநூல் பக்கத்தில், ‘தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமாரை காணவில்லை. அவரை யாராவது கண்டால் தொகுதி பக்கம் வரச் சொல்லுங்க’ என்று பதிவிட்டுருந்தார்.

முகநூல் பதிவு

தனுஷ்குமார் குறித்த சரவணின் பதிவு வைரலானது. அதை நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமாரும் பார்தந்திருக்கிறார். அதனால் அந்த இளைஞரைச் சந்தித்துப் பேச முடிவெடுத்து அவரைத் தேடினார். அப்போது சரவணன், நயினாரகம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

உடனடியாக அந்த கிராமத்திற்குச் சென்று அந்த இளைஞரை நேரில் சந்தித்தார்,தனுஷ்குமார் எம்.பி. தன்னுடைய முகநூல் பதிவின் விளைவாக தன்னை நேரில் சந்திக்க எம்.பி வந்ததால் சரவணன் மகிழ்ச்சி அடைந்தார். இந்தத் தகவலை அறிந்ததும் கிராமத்து மக்களும் கூடிவிட்டனர்.

தனுஷ்குமார் எம்.பி

இது பற்றி தனுஷ்குமார் எம்,பி-யிடம் கேட்டதற்கு, ``நான் இந்தத் தொகுதி மக்களுடன் எப்போதும் தொடர்பிலேயே இருக்கிறேன். ஆனாலும், என்னைக் காண முடியவில்லை என ஒருவர் முகநூலில் பதிவிட்டிருந்ததால் அவரைச் சந்திக்க விரும்பினேன்.

சரவணன் வீட்டுக்குச் சென்று நேரில் சந்திக்கும்போது வெறுங்கையுடன் போகக்கூடாது என்பதற்காக இனிப்பு வாங்கிச் சென்றேன். அவர் வீட்டில் இருக்கவில்லை. வெளியில் இருப்பதாகச் சொன்னதால் அவர் இருக்கும் இடத்துக்குச் சென்று இனிப்பு பார்சலைக் கொடுத்தேன்.

Also Read: ஜூனியர் விகடன் சர்வே முடிவுகள்: தென்காசி மாவட்டத்தில் வெல்லப்போவது யார்?

அவர் என்னைப் பார்த்ததும், `நீங்க வேற காரில் தானே இந்த வழியாகப் போவீங்க. இன்னைக்கு வேற காரில் வந்திருக்கீங்களே?’ என்று கேட்டார். நான் இந்த ஊரின் வழியாகவே சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்குச் சென்று வருவதை அவர் உன்னிப்பாக கவனித்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டேன்.

பின்னர் சரவணன் என்னிடம், `சார் நீங்க தேர்தலின்போது எங்க ஊருக்கு ஒரு பேருந்து நிறுத்தமும் பொதுக் கழிப்பிடமும் அமைத்துத் தருவதாகச் சொல்லியிருந்தீங்க. இதுவரைக்கும் அதை நிறைவேற்றிக் கொடுக்காததால் உங்களைக் காணவில்லை எனப் பதிவிட்டேன்’ என்றார். நான் அவரிடம், கொரோனா பாதிப்பு காரணமாக மத்திய அரசு, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நிதியை நிறுத்திய விவரத்தை எடுத்துச் சொன்னேன்.

இனிப்பான சந்திப்பு

மத்திய அரசு நிதி ஒதுக்கியதும் தொகுதி முழுவதும் பல்வேறு பணிகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. அதோடு சேர்த்து நயினாரகம் கிராமத்துக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுக்கிறேன் என்று சொன்னதோடு எனது செல்போன் நம்பரை அவருக்குக் கொடுத்து, எதுவும் தேவை என்றால் என்னைக் கூப்பிடுங்கள் என்று தெரிவித்தேன். எனது இந்த செயலால் அவரும் கிராமத்துக்கு மக்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள்” என்றார், தனுஷ்குமார்.

இது பற்றி முகநூலில் பதிவிட்ட சரவணனிடம் கேட்டதற்கு, ``நான் எம்.பி-க்கு எதிராகப் பதிவிட்டதால் என்னை அ.தி.மு.க அனுதாபி என்று சொல்கிறார்கள். அதில் உண்மை கிடையாது. எங்கள் ஊரின் நலன் கருதியே அந்தப் பதிவைப் போட்டேன். பேருந்து நிறுத்தம் மற்றும் பெண்களுக்கான கழிவறைக் கட்டடம் கட்டிக் கொடுக்குமாறு பலதடவை வலியுறுத்தியும் நடக்காததால் எம்.பி-யைக் காண்வில்லை எனப் பதிவிட்டேன்.

ஆனால், அவர் என்னைத் தேடி வந்ததோடு, கொரோனா காலம் என்பதால் நிதி ஒதுக்கப்படாததையும் விளக்கமாக எடுத்துச் சொன்னார். அவர் சொன்ன பிறகுதான் எனக்கு அவர் தரப்பு நியாயம் புரிந்தது. நிதி வந்ததும் அவர் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதனால் அந்தப் பதிவை நான் நீக்கிவிட்டேன்" என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/2RhUX2d
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*