கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அத்தியாவசியம் மற்றும் அவசரத் தேவைக்காக மட்டுமே வெளியில் வர வேண்டும். தேவையின்றி சுற்றுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியிருக்கிறது. ஆனாலும், அநாவசியமாக கூட்டம் கூட்டமாக பலர் வெளியில் திரளுகிறார்கள். சமூக இடைவெளியையும் கடைப்பிடிப்பதில்லை. முகக்கவசமும் அணிவதில்லை. இதனால், தொற்றைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
இந்த நிலையில், வீட்டில் அடங்காமல் வெளியில் சுற்றித்திரியும் இளைஞர்களை மடக்கிப் பிடிக்கும் காவல்துறையினர், சிறப்பான முறையில் கவனித்து வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்கள். திருக்குறள் சொல்ல வைப்பது, தோப்புக்கரணம் போட வைப்பது போன்ற தண்டனைகளை காவல்துறையினர் கொடுப்பதால், இளைஞர்கள் பதறிப்போய் ஓட்டம் எடுக்கிறார்கள். வேலூர் பாகாயம் பேருந்து நிலையம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருக்கும் போலீஸார், பைக்கில் பறந்துவரும் இளைஞர்களைப் பிடித்து விசாரிக்கின்றனர்.
அவர்கள் தேவையின்றி சுற்றுவது தெரியவந்தால், போலீஸார் தாங்கள் மேற்கொள்ளும் பணிகளை செய்யச் சொல்லி இளைஞர்களை நூதன முறையில் தண்டிக்கின்றனர். அரைமணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் தங்களோடு இளைஞர்களை சாலையிலேயே நிற்க வைத்து அந்த வழியாக வரும் வாகனங்களின் பதிவெண், எங்கிருந்து எங்கு செல்கிறார்கள் என்பதைக் கேட்க வைக்கிறார்கள். அதோடு, கொரோனா விழிப்புணர்வையும் ஏற்படுத்த வைக்கும் காவல்துறையினர், பின்னர் கண்டிப்புடன் இளைஞர்களை வீட்டுக்கு அனுப்புகிறார்கள்.
இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றிய இளைஞர்களைப் பிடித்து போலீஸார் தோப்புக்கரணம் போட வைக்கின்றனர். ஆரணி டவுன் பழைய பேருந்து நிலையம் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த டி.எஸ்.பி கோட்டீஸ்வரன் தலைமையிலான போலீஸார், காரணமின்றி வெளியில் சுற்றித்திரிந்த 15 வாகனங்களைப் பறிமுதல் செய்து தலா 200 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும், அநாவசியமாக சுற்றிய இளைஞர்கள் சிலரை 100 தோப்புக்கரணம் போட வைத்து எச்சரித்து வீட்டுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3fAZgxY
via
