ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், 18 வயது பூர்த்தியாகாத பெண் பிள்ளைகள் மற்றும் 21 வயது நிறைவு பெறாத ஆண் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைப்பதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இந்தப் பணியில் சமூக நலத்துறை, சைல்டு ஹெல்ப் லைன் அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். இந்த அலுவலர்கள், குழந்தை திருமணங்கள் அதிகம் நடைபெறும் இடங்களைக் கண்டறிந்து, சிறுவயதில் திருமணம் செய்து கொடுப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள்.
பள்ளி, கல்லூரி, பொதுமக்கள் கூடும் இடங்களிலும் துண்டு பிரசுரங்களை வழங்கி அறிவுறுத்துகிறார்கள். ஆனாலும், பள்ளியில் படிக்கும் மாணவிகள் மற்றும் படிப்பை பாதியில் கைவிட்ட சிறுமிகளுக்கு 18 வயது பூர்த்தியாகும் முன்பே திருமணம் செய்து வைக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றன.
கொரோனா பொதுமுடக்கம் நிலவும் இந்த அசாதாரண சூழலிலும், மைனர் திருமணங்கள் அதிகம் நடைபெறுவது, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. ராணிப்பேட்டை, திருப்பத்தூரை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி தொடங்கி ஏப்ரல் மாதம் முடிவதற்குள்ளாக 73 சிறுமிகளின் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள் சைல்டு லைன் அதிகாரிகள்.
`ஜனவரியில் 9 திருமணங்கள், பிப்ரவரியில் 9 திருமணங்கள், மார்ச்சில் 24 திருமணங்கள், ஏப்ரல் மாதம் 31 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. மைனர் திருமணங்கள் தொடர்பாக மாவட்ட சைல்டு லைன் அலுவலகத்துக்கு 1098 என்ற தொலைப்பேசி எண்ணில் மட்டும் 107 அழைப்புகள் வந்துள்ளன. அதை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு 73 திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. 17 சிறுமிகளுக்கு ஏற்கெனவே திருமணம் நடைபெற்றுவிட்டது. அவர்கள் மீட்கப்பட்டு குழந்தைகள் நலக்குழுமத்தில் ஆஜர்படுத்தி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 9 அழைப்புகள் பொய்யானவை. 5 சிறுமிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள். 3 அழைப்புகளுக்கான சரியான முகவரி தெரியவில்லை' என்று சைல்டு லைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/33vZYab
via
