கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே ஈத்தன்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (37). இவர் வெள்ளிச்சந்தை காவல் நிலையம் அருகில் பைக் சீட் கவர் மற்றும் பேக் தயாரிக்கும் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி உமா (33). இவர்களுக்கு திருமணமாகி அஜீத்(11) என்ற மகனும், காவியா (9) என்ற மகளும் உள்ளனர். கடந்த 15-ம் தேதி நள்ளிரவு ரமேஷின் வீட்டிலிருந்து அவரது மனைவி உமாவின் அலறல் சப்தம் கேட்டது. பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்கள் உடனே அங்கு சென்றனர். இதைக் கண்டதும் ரமேஷ் வீட்டில் இருந்து வெளியேறி தப்பி ஓடி விட்டார்.
அக்கம்பக்கத்தினர் ரமேஷின் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உமா உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவர்கள் உமாவை மீட்டு ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உமாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து உமாவின் சகோதரி பிரியா வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்துராமன் ரமேஷ் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் ரமேஷ் மனைவி உமா மீது சந்தேகப்பட்டு, அவரை படுகொலை செய்தது தெரிய வந்தது.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கூறுகையில், ``ரமேஷை விட உமா அழகாக இருப்பார். தனது மனைவியை யாரும் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக வெளியில்கூட அழைத்துச் செல்லமாட்டார். மனைவியை யாரும் எட்டிப்பார்த்துவிடக்கூடாது என்பதற்காக வீட்டைச் சுற்றி சுவர் எழுப்பினர். உமா டெய்லரிங் வேலை செய்வதால் அடிக்கடி சில பெண்களுடன் மொபைலில் பேசுவார்.
கடந்த 15-ம் தேதி ரமேஷ் தனது போனில் உமாவை தொடர்புகொண்டுள்ளார். ஆனால் அவர் வேறு ஒருவருடன் பேசிக்கொண்டு இருப்பதாக வந்துள்ளது. இதையடுத்து ஆத்திரம் அடைந்த அவர், அன்று இரவு வீட்டுக்குச் சென்று மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்திருக்கிறார்" என்றனர். தலைமறைவான ரமேஷை போலீஸார் கைது செய்துள்ளனர். ரமேஷ் போலீஸிடம் அளித்த வாக்குமூலத்தில்,``கடந்த ஒரு வருடமாக எனது மனைவி உமா என்னை அலட்சியம் செய்து வந்தார்.
Also Read: சென்னை: கணவரை பெட்ரோல் ஊற்றிக் கொலை செய்த மனைவி - நாடகமாடியவர் சிக்கியது எப்படி?
என்னிடம் சரியாக பேசுவதில்லை. உறவுக்கார ஆண்களிடம் அவள் சிரித்து பேசி பழகுவது எனக்கு பிடிக்கவில்லை. இதனால் அவள் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவளை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். சம்பவத்தன்று நள்ளிரவு எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதால் அவளை கொலை செய்துவிட்டேன்" என வாக்குமூலத்தில் ரமேஷ் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர். சந்தேகத்தின் காரணமாக மனைவியை கொலை செய்த ரமேஷின் செயல் வெள்ளிச்சந்தை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3fspFy0
via
