தமிழக முதல்வர் ஸ்டாலினைச் சந்திக்கும் சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பூங்கொத்தைத்தான் அன்பளிப்பாகக் கொடுத்து வருகிறார்கள். இதுதொடர்பாக, விகடன் இணையதளத்தில் `பொக்கே கொடுக்கும் வி.ஐ.பி-க்களே... நீங்கள் ஏன் இந்தப் பரிசுகளை பரிசீலிக்கக் கூடாது?’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். பொக்கேவால் எந்தப் பலனும் இல்லை... இது தமிழ்நாட்டின் பாரம்பர்ய வழக்கமும் அல்ல. இதன் விலையும் மிக அதிகம். இதற்கு மாற்றாக, புத்தகங்கள், மரக்கன்றுகள், கைவினைப் பொருள்கள் கொடுக்கலாம் என விகடன் செய்தியில் சுட்டிக்காட்டியிருந்தோம்.
``அலங்கார மலர்களைக் கொண்டுதான் பொக்கேக்கள் உருவாக்கப்பட்டு, விற்பனைக்கு வருகிறது. நல்ல தரமான பொக்கேவின் விலை சுமார் ரூ.5,000. மேற்கத்திய நாடுகளில்தான் பொக்கே கொடுக்கும் வழக்கம் தொடங்கியது. ஜெயலலிதாவின் அரசியல் வருகைக்குப் பிறகுதான் பொக்கே கொடுக்கும் வழக்கம் தமிழகத்தில் அதிகமானது.
Also Read: பொக்கே கொடுக்கும் வி.ஐ.பி-க்களே... நீங்க ஏன் இந்தப் பரிசுகளை பரிசீலிக்கக் கூடாது?
பெரியார், அண்ணா காலத்தில் மரியாதை நிமித்தமாக, கைத்தறி மற்றும் கதர் ஆடைகள் போர்த்தும் வழக்கம் இருந்தது. இதனால் நெசவாளர்கள் பயன் அடைந்தார்கள். தலைவர்களுக்கு போர்த்தப்படும் கைத்தறி, கதர் ஆடைகள் கட்சிகளின் நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் வழங்கப்பட்டன.
கதர், கைத்தறி துண்டுகள், வேட்டிகள் அன்றாடம் பயன்படக்கூடியவையாகும். காலப்போக்கில், மரியாதை நிமித்தமாக, மலர் மாலைகள் போடும் வழக்கம் தொடங்கின. இதனால் தமிழ்நாட்டில் உள்ள மலர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் பலன் அடைந்தார்கள். இதற்கிடையே புத்தகங்கள் கொடுக்கும் வழக்கத்தை கருணாநிதி உருவாக்கினார்.
மு.க.ஸ்டாலினும் இதைத் தனது கட்சிக்காரர்களிடம் ஊக்கப்படுத்தி வந்தார். ஆனால், தற்போது முதலமைச்சர் ஸ்டாலினை சந்திப்பவர்கள் அனைவருமே மரியாதை நிமித்தமாக, விலை உயர்ந்த பொக்கேவை வழங்குகிறார்கள். இதனால் ஏராளமான பொக்கேக்கள் குவிந்துகொண்டிருக்கின்றன. இதனால் எந்தப் பயனும் இல்லை. இதற்கு மாற்றாக, புத்தகங்கள் வழங்கலாம். இதனால் எழுத்தாளர்கள், அச்சுத்தொழிலாளர்கள், வெளியீட்டாளர்கள் உள்ளிட்ட பலர் பயன் அடைவார்கள்.
அதிகளவில் குவியும் புத்தகங்களை நூலகங்களுக்கு வழங்கலாம். பள்ளி, கல்லூரிகளுக்கும் வழங்கலாம். முதலமைச்சரை சந்திப்பவர்கள், மரக்கன்றுகளை வழங்கலாம். இதனால் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் பயன் அடைவார்கள். சுற்றூச்சூழலும் மேம்படும். ஒருவேளை, விலையுயர்ந்த பொருள்களைக் கொடுப்பதுதான் தங்களுக்கு கௌரவம் என நினைத்தால், கைவினைப் பொருள்கள், அழகிய ஓவியங்கள், தஞ்சாவூர் கலைத்தட்டு உள்ளிட்டவற்றை முதல்வருக்கு வழங்கலாம்.
இது தொடர்பாக, புதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்பான வேண்டுகோள் விடுக்க வேண்டும். இவரைச் சந்திப்பவர்கள் மட்டுமல்ல, மற்ற அமைச்சர்களைச் சந்திப்பவர்களும் கூட, பொக்கேவுக்கு மாற்றாக, மரக்கன்று, புத்தகம், கைத்தறி ஆடை, பனை, மூங்கில், சணல் போன்ற பொருள்களால் செய்யப்பட்ட கைவினைப் பொருள்கள், ஓவியம், தஞ்சாவூர் கலைத்தட்டு இவைகளில் ஏதாவது ஒன்றை வழங்கினால் அவை தமிழ் மண்ணுக்குப் பெருமை சேர்க்கும். தமிழ் மக்களும் பயன் அடைவார்கள்" என அந்தச் செய்தியில் கோரிக்கை வைத்திருந்தோம்.
இது நல்ல யோசனை என வாசகர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும்,`என்னை சந்திக்க வருவோர், பூங்கொத்து, பொன்னாடை தருவதைத் தவிர்த்துவிட்டு, புத்தகங்களை வழங்குகள்' என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/2RVLmyq
via
