புதுச்சேரியில் தீவிரமெடுத்திருக்கும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால் அம்மாநில மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். புதிய நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு சுமார் இரண்டாயிரத்தை தாண்டியது. அதேபோல 40 முதல் 50 பேர் என உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் தற்போது தொற்றின் தீவிரம் குறைந்திருக்கிறது.
ஆனாலும் தமிழகத்தைச் சேர்ந்த கொரோனா நோயாளிகளும் புதுச்சேரியை நோக்கி படையெடுத்து வருவதால், ஆக்சிஜன் படுக்கைகளுக்கான தேவைகள் அதிகரித்திருக்கின்றன. இத்தகையச் சூழலில் தனது சொந்த முயற்சியில் ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய தற்காலிக இலவச கொரோனா மருத்துவமனையை அமைத்திருக்கிறார் பாகூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார்.
சுகாதாரத்துறை செயலர் அருண், இயக்குநர் மோகன்குமார் முன்னிலையில் சட்டமன்ற தி.மு.க தலைவர் ஆர்.சிவா திறந்து வைத்த அந்த மருத்துவமனையில் ஆக்சிஜனுடன் கூடிய தனிமைப்படுத்தப்பட்ட 25 படுக்கைகள், ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை, 24 மணி நேரமும் மருத்துவர் மற்றும் செவிலியர்களின் கண்காணிப்பு மற்றும் ஆலோசனை, மூன்று வேலைகளும் ஆரோக்கிய உணவு, மாலையில் சிற்றுண்டி என அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், “24 மணி நேரமும் இலவச ஆம்புலன்ஸ் வசதியுடன் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த தற்காலிக மருத்துவமனைக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்கள் உதவிகள் செய்திருக்கின்றன. முழுக்க முழுக்க கிராமப்புறங்களை உள்ளடக்கியதுதான் எனது பாகூர் தொகுதி. நகர்ப்புற மக்களுக்கு கிடைக்கும் மருத்துவம் கிராமப்புற மக்களுக்கு முழுமையாக கிடைப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன. பெருந்தொற்று காலத்தில் எங்கள் தொகுதி மக்களின் சிரமங்களைக் குறைப்பதற்கான எனது சிறு முயற்சிதான் இந்த தற்காலிக கொரோனா மருத்துவமனை” என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3vJCriw
via
