தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட மேற்கு, நாலாட்டின்புதூர் மற்றும் கழுகுமலை காவல் நிலைய பகுதியில் 6 வீடுகளில் தங்க நகை, பணம், வழிப்பறி மற்றும் 4 இடங்களில் பைக் திருட்டு தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் வாகனத் திருட்டு மற்றும் வீடுகளில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளைக் கொண்டு விசாரணையைத் தொடங்கினர்.
Also Read: திசையன்விளை: ‘நைட்டி அணிந்து 5 கடைகளில் திருடிய திருடன்' - பரபரப்பான சி.சி.டி.வி காட்சிகள்!
அத்துடன் திருட்டு நடந்த இடத்தில் பதிவாகி இருந்த கைரேகைகளை வைத்து மற்ற மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகளின் கை ரேகைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தனர். இதில், தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் கள்ளம்புளியைச் சேர்ந்த ரவி என்ற கார்த்திக் என்பவரின் கைரேகையுடன் ஒத்துப்போனது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் ரவி என்ற கார்த்திக்கை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், கோவில்பட்டி சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வீடு புகுந்து திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதை ஒத்துக் கொண்டார். அவர் திருடிய நகை, பணம் மற்றும் இரு சக்கர வாகனங்கள் பதுக்கி இருந்த இடத்தை அறிந்து போலீஸார் அவற்றை மீட்டனர். இதில் ரூ.20 லட்சம் மதிப்பிலான 64 பவுன் தங்க நகைகள், 50 கிராம் வெள்ளிப் பொருட்கள், ரூ.2 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் 4 பைக்குகள் ஆகியவை மீட்கப்பட்டன.
இவர், கோவில்பட்டி மேற்குக் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட 4 வீடுகளில் புகுந்து தங்க நகைகள் மற்றும் பணம் திருடியது, வழிப்பறி செய்த வழக்கு மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் திருடியது என 7 வழக்குகளிலும், கழுகுமலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் திருடிய வழக்கிலும், நாலாட்டின்புதூர் காவல் நிலைய பகுதியில் வீடு புகுந்து நகை திருடியது மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கு என 2 வழக்குகளிலும் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் மீது விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் காவல் நிலையத்தில் வீடு புகுந்து திருடிய வழக்கு உள்ளது என்பதும், 90 திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்துப் பேசிய மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார், ”கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்த திருட்டுச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக கோவில்பட்டி டி.எஸ்.பி உதயசூரியன் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் சபாபதி, பத்மாவதி, உதவி ஆய்வாளர் மாதவராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் நாராயணசாமி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
கடந்த 15 நாட்களாக தீவிர விசாரணை நடத்தி வந்தனர். கைரேகை, சிசிடிவி காட்சி உள்ளிட்டவைகளை வைத்து குற்றவாளியை தேடி வந்தனர். இந்த நிலையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ரவி என்ற கார்த்திக் என்பவரை தனிப் படையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள நகைகள், ரூ.2 லட்சம் பணம் மற்றும் நான்கு பைக்குகள், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3ly3qeP
via
