பட்டுக்கோட்டை அருகே பாஜக நிர்வாகியாக இருக்கும் வாலிபர் ஒருவரைக் கைது செய்த போலீஸ் அவர் மீது கஞ்சா விற்பனை செய்ததாக வழக்கு பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்திய நிலையில் நீதிபதி முன் போலீஸ், தன் மீது பொய் வழக்கு போட்டுள்ளதாகக் கூறி விஷம் தின்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர், சிவக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் சிவானந்தம் (26) இவர் மதுக்கூர் முக்கூட்டு சாலையில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். பாஜக -வில் மதுக்கூர் ஒன்றிய செயலாளராகவும் இருக்கிறார். இந்நிலையில் கடந்த 7- ம் தேதி இரவு நண்பர்கள் பத்து பேருடன் சேர்ந்து இந்திரா நகரில் உள்ள தனது வீட்டில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த போலீஸார் அனைவரையும் கைது செய்து மதுக்கூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து சிவானந்தம் மீது கஞ்சா விற்றதாக வழக்கு பதிவு செய்ததுடன் பட்டுக்கோட்டை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அழகேசன் முன்பு ஆஜர்படுத்துவதற்காக அவரது வீட்டிற்கு அழைத்து சென்றனர். மேலும் கஞ்சா வழக்கு தொடர்பாக நீதிபதி அழகேசன், சிவானந்தத்திடம் கேட்டபோது, "அய்யா, என் மீது போலீஸ் பொய் வழக்கு போட்டுள்ளனர். இதனால் எனக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என கூறி விஷத்தை விழுங்கி மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து உடனடியாக போலீஸார் அவரை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை கொடுத்த பின்னர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிவானந்தம் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொய் வழக்கு போட்ட போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கூறி வருகின்றனர். சிங்கப்பூரில் வேலை பார்க்கும் சிவானந்தம் சகோதரர் ஒருவரும் இது தொடர்பாக தஞ்சாவூர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு புகார் அனுப்பியுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்டுத்தியுள்ளது.
இதுகுறித்து சிவானந்தம் தரப்பில் பேசினோம், ''வீட்டில் இருந்தவரைப் பிடித்து அழைத்து சென்ற போலீஸ் சிரமேல்குடி புதுக்குளம் அருகே டூவீலரில் வந்து கொண்டிருந்ததாகவும், சிவானந்தத்திடம் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்ததால் கைது செய்து கஞ்சா வழக்கு பதிவு செய்து செய்ததாகவும் கூறியுள்ளனர்.வீட்டில் சீட்டு விளையாடிய மற்றவர்கள் மீது அது தொடர்பாக மட்டுமே வழக்கு பதிவு செய்து விட்டு சிவானந்தம் மீது மட்டும் கஞ்சா வழக்கு பதிவு செய்தது ஏன் எனத் தெரியவில்லை.
Also Read: ``பாஜக-வைக் கொச்சைப்படுத்தினால், அவர்களின் பிசினஸில் கைவைப்போம்" - உண்ணாவிரத மேடையில் அண்ணாமலை
அதே போல் கைது செய்த பிறகு சிவானந்தம் கையில் விஷம் கிடைக்கும் அளவிற்கு போலீஸ் மெத்தனமாக இருந்துள்ளனர். " கஞ்சாவை நான் பார்த்ததும் கிடையாது, விற்கவும் இல்லை ஏன் என் மீது பொய் வழக்கு போடுறீங்கணு" போலீஸ் தரப்பில் சிவானந்தம் கேட்டதற்கு முறையான பதில் எதுவும் சொல்லவில்லை. கடந்த 5 ஆம் தேதி பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் தஞ்சாவூரில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் அக்கட்சி நிர்வாகி என்கிற முறையில் சிவானந்தம் கலந்துகொண்டார்.
இதனை அடுத்த நாள் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து போன் செய்து, "போராட்டத்திற்கு போனீங்களா, எத்தனை பேர் போனீங்க" என நட்பாக கேட்பது போல் விசாரித்துள்ளனர். இந்நிலையில் அடுத்த நாள் இரவுதான் வீட்டில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தவர்களை கைது செய்துள்ளனர். சீட்டு விளையாடியதை நியாப்படுத்தவில்லை. ஏன் கஞ்சா வழக்கு போட்டார்கள் என்றுதான் கேட்கிறோம். இதனால் சிவானந்தம் மன உளைச்சல் ஏற்பட்டு விஷத்தைத் தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளான். போலீஸின் இந்த செயலால் எங்க வீட்டு மானமே போச்சு. இதற்கான நியாயம் எங்களுக்கு கிடைக்க வேண்டும்" என்றனர்.
போலீஸ் தரப்பில் விசாரித்தோம், சிவானந்தம் மீது ஏற்கெனவே கள்ள லாட்டரி விற்பனை செய்தது உள்ளிட்ட சில வழக்கு உள்ளது. கஞ்சா எடுத்து சென்றபோது அவரைக் கைது செய்ததால் கஞ்சா வழக்கு போட்டதாகத் தெரிவிக்கின்றனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3fK1snZ
via
