கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் செங்கோடி பகுதியை சேர்ந்தவர் அருள்ராஜ். இவரும், அவரின் மனைவி சுனிதா(45) மற்றும் மகள் லிடியா (20) ஆகியோர் நாகர்கோவிலில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலிலில் நேற்று இரவு வந்து அமர்ந்தனர். கலெக்டர் அலுவலகம் முன்பு ஏன் அமர்ந்திருக்கிறீர்கள் என போலீஸார் அவரிடம் கேட்டதற்கு, அவர்களுக்கு சிபு(22) என்ற மகன் இருப்பதாகவும், கடந்த 7 வருடங்களுக்கு முன்பு அவரு மனநலம் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், மகனுக்கு மனநலம் சரியாகத நிலையில் தங்கள்மீதே தாக்குதல்கள் நடத்துவதகவும் கூறினர்.
மேலும் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சமடைந்துள்ளதாகவும் கூறினர். அவர்கள் வீட்டில் இருந்து துணிகள் உள்ளிட்ட பொருட்களையும் எடுத்து வந்திருந்தனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி கடந்தபிறகும் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்படவில்லை. இந்த நிலையில் இன்று அவர்கள் காலை தக்கலை டி.எஸ்.பி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து அருள்ராஜ் கூறுகையில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மனநல காப்பகம் கிடையாது. இதனால் அடுத்த மாநிலத்துக்கு கொண்டுபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மனநலகாப்பகம் அமைக்க வேண்டும். குடும்பத்தில் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தால், ஊரைவிட்டே அந்த குடும்பத்தை ஒதுக்கிவைக்கிறார்கள். என் மகன் பத்தாம் வகுப்பு படிக்கும்போது மனநல பாதிப்பு ஏற்பட்டது. இந்த பாதிப்பு ஏற்பட்டவர்கள் மருந்து மாத்திரை சாப்பிட மாட்டார்கள். எனவே என் மகனை பாதுகாப்பது மிகவும் கஷ்டமாக உள்ளது.
என் மகனுக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டதால் கடந்த ஏழு வருடங்களாக குடும்பத்தினர் மிகவும் வருத்தத்தில் இருக்கிறார்கள். வருமானமும் இல்லை. இவர்களுக்காக அரசு திட்டம் கொண்டுவரவேண்டும். எல்லாத்துறையிலும் அவசர உதவி பெறும் திட்டம் உள்ளது, போன்று மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவசர உதவி பெறும் திட்டம் ஏற்படுத்த வேண்டும்.
ஆசாரிபள்ளம் அரசு மனநல காப்பக மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சையில் இருந்த என் மகன் சிபு தற்போது வீட்டுக்கு வந்து, என்னையும் எனது மனைவி மற்றும் மகளை தாக்குகிறார். எனது மகனை அரசு மனநல காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வறுமையில் வாடும் தனது குடும்பத்திற்கு அரசு நிதி வழங்க வேண்டும். தற்போது எங்களது உயிருக்கு பயந்து கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்துள்ளோம்" என்றார். இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
Also Read: ஈரோடு: `பணம் கேட்டான், முகத்தில் எச்சில் துப்பினான்!’ - மனநலம் பாதித்தவரை எரித்துக் கொன்ற வாலிபர்
from மாவட்ட செய்திகள் https://ift.tt/2VtTubn
via
