`நான் அதை கண்டுக்கிறதே இல்லை’ -வங்கியின் சொத்து விற்பனை அறிவிப்புக்கு கே.சி.பழனிசாமியின் ரியாக்‌ஷன்

0

கரூர் மாவட்ட தி.மு.க முக்கியப் புள்ளியான கே.சி.பழனிசாமி பல வங்கிகளில் பெற்ற கடனை அடைக்காததால், பாரத ஸ்டேட் வங்கி, அவரது சொத்துகளை விற்பனைக்காக அறிவித்திருப்பது, கரூர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கரூர்

கரூர் மாவட்ட தி.மு.கவில் ஒருகாலத்தில் அசைக்க முடியாத சக்தியாக கோலோச்சியவர் கே.சி.பழனிசாமி. கரூர் தொகுதி எம்.பி.யாக இருந்தவர். காவிரியில் மணல் அள்ளும் தொழில் மூலம், பொருளாதார நிலையில் உயர்ந்தார். அதன்பிறகு, பல தொழில்களில் கால் பதித்தார். அதற்காக, வங்கிகளில் கடன் பெற்றார். அப்படி, வாங்கிய வங்கி கடனுக்காக அடமானம் வைக்கப்பட்ட ரூ.197.79 கோடி மதிப்புள்ள சொத்துக்களை விற்பனை செய்வதாக கோவை பாரத ஸ்டேட் வங்கி விற்பனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்மூலம், கே.சி.பழனிசாமி மீண்டும் லைம்லைட்டுக்குள் வந்திருக்கிறார்.

Also Read: கரூர்: தரம் குறைந்த நிலக்கரி; பல கோடி ரூபாய் ஊழல்?! - டி.என்.பி.எல் ஆலை அதிகாரிகள் இருவர் சஸ்பெண்ட்

கரூர் தொகுதி தி.மு.க முன்னாள் எம்.பியாகவும், அரவக்குறிச்சி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏவாகவும் இருந்த கே.சி.பழனிசாமி, தற்போது தி.மு.க சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினராக உள்ளார். இவருக்கு, கரூர் மாவட்டம், மாயனூரில் கே.சி.பி பேக்கேஜிங்ஸ் என்ற சிமெண்ட் கம்பெனிகளுக்கு சாக்குப்பை உற்பத்தி செய்து தரும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. புதுச்சேரியில் தொழில் நிறுவனம் உள்ளது. அதோடு, மில்களும் உள்ளன. தவிர, கரூரில் வீடு உள்ளிட்ட சொத்துக்கள் உள்ளன.

கடந்த 2004 - ஆம் ஆண்டு கரூர் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்று, 5 ஆண்டுகள் கரூர் எம்.பி.யாக இருந்தார். அதன்பின்பு, 2009 ஆம் ஆண்டு கரூர் தொகுதி எம்.பி. தேர்தலில் போட்டியிட்டப்போது, இந்திய அளவில் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக சொத்து மதிப்பு காட்டி, எம்.பி வேட்பாளர்களில் அதிக சொத்து மதிப்பு காட்டியதில் 2 வது இடத்தில் இருந்தார். ஆனால், அந்த தேர்தலில், அ.தி.மு.க முன்னாள் மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரையிடம் தோல்வியடைந்தார். அதன்பிறகு, 2011 - ஆம் ஆண்டு, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு எம்.எல்ஏவானார். அதன்பிறகு, கடந்த 2016-ஆம் நடைபெற்ற அரவக்குறிச்சி தொகுதி தேர்தலில் போட்டியிட்டு, அப்போதைய அ.தி.மு.க வேட்பாளரான செந்தில் பாலாஜியிடம் தோல்வியடைந்தார்.

கே.சி.பழனிசாமி

செந்தில் பாலாஜியே இவரை எதிர்த்து போராட்டம் நடத்திதான், ஜெயலலிதா கவனத்திற்கு போய், அரசியலில் உயரம் பெற்றார். அப்படிப்பட்ட கே.சி.பிக்கு சில வருடங்களாக தொழில்களில் பலத்த அடி, நஷ்டம். கோயில் கும்பாபிஷேகத்திற்கு யார் கேட்டாலும் லட்சம் லட்சமாக அள்ளிக் கொடுத்த அவர், கடந்த சில வருடங்களாக பெரும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தார். இந்நிலையில், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவரின் பெயரிலும், அவரின் மனைவி அன்னம்மாள், மகன் சிவராமன், மகள் கலையரசி பெயர்களில் உள்ள சொத்துக்களை அடமானம் வைத்து, வங்கிகளில் ரூ. 200 கோடிக்கு மேல் கடன் பெற்றிருந்தார். இந்நிலையில், ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள ரூ.197 கோடி மதிப்புள்ள சொத்துக்களின் விற்பனை அறிவிப்பை, கோவை ஸ்டேட் வங்கி நாளிதழ்களில் வெளியிட்டுள்ளது.

Also Read: `சிபாரிசு செய்த செந்தில் பாலாஜி முதல் தம்பியை நலம் விசாரிக்காத சசிகலா வரை!?' கழுகார் அப்டேட்ஸ்

பாரத ஸ்டேட் வங்கி ரூ. 81,00,54,930, கனரா வங்கி ரூ. 57,16,63,451, யூனியன் பேங்க் ஆப் இந்தியா ரூ.35,39,55,747, ஐ.டி.பி.ஐ ரூ.24,22,26,555 என ரூ.197,79,00,683 கோடி சொத்துக்கள் விற்பனைக்கு வந்துள்ளன. கரூர் வைஸ்யா வங்கி, கடனில் பிணையப்படுத்துதலில் முன்னுரிமை பிரச்னை உள்ளதால், அது மட்டும் விற்பனையில் சேர்க்கப்படவில்லை என அந்த விற்பனை அறிவிப்பில் வங்கி கூறியுள்ளது.

இதுகுறித்து, கே.சி.பழனிசாமியிடம் பேசினோம். "இது பேங்க் வழக்கமாக பண்றதுதான். நாங்க அதை கண்டுக்கிறதே இல்லை" என்று சாதாரணமாக சொன்னார்!



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3s2INsB
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*