‘நவரசா’ : ‘கிட்டார் கம்பி மேலே நின்று' இதை நாங்க சொல்லியே ஆகணும் கெளதம் மேனன்!

0

மணிரத்னம் தயாரிப்பில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருக்கிறது ‘நவரசா’. ஒன்பது இயக்குநர்கள் இயக்கத்தில் 9 ஆந்தாலஜி கதைகள். சூர்யா, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, சித்தார்த், பிரகாஷ் ராஜ், பார்வதி, ரேவதி, ரோகிணி எனப் பல முக்கியமான நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த ‘நவரசா’வில் முதல் ரசமாக கெளதம் மேனன் இயக்கத்தில், சூர்யா நடித்திருக்கும் காதல் ரசமான ‘கிட்டார் கம்பி மேலே நின்று' கதை பார்த்தோம். அதன் ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட் இங்கே!

சூர்யா - கிட்டார் கம்பி மேலே நின்று

கதை என்னன்னா?!

‘வாரணம் ஆயிரம்’, ‘விண்ணை தாண்டி வருவாயா’, ‘நீதானே என் பொன் வசந்தம்’, ‘அச்சம் என்பது மடமையடா’ என தன்னுடைய முந்தைய படங்களை எல்லாம் கெளதம் மேனன் சரியான அளவில் சேர்த்து அரைத்து செதுக்கியிருக்கும் படமே ‘கிட்டார் கம்பி மேலே நின்று'. எந்த வேலையும் இல்லாமல் காபி ஷாப்பில் உட்கார்ந்து ஒரு கேப்பசினோவையே நாலு மணி நேரம் குடிக்கும் எலீட் காதலர்களை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் கெளதம் மேனன்.

என்ன பேசுகிறோம், ஏன் பேசுகிறோம், எதற்காக பேசுகிறோம் என்பதே தெரியாமல் படத்தில் சூர்யாவும், ப்ரயாகா ரோஸ் மார்ட்டினும் மாறி மாறி பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இடை இடையே பாடுகிறார்கள், வெட்கப்படுகிறார்கள், ஹஸ்க்கி வாய்ஸில் ரொமான்ஸ் செய்கிறார்கள். ஆனால், பார்க்கும் நமக்கோ ரொமான்ஸ் நரம்புகள் கிட்டார் கம்பிபோல ஒவ்வொன்றாக அறுபடுகிறது.

‘’செம கூலா, கேஷுவலா, பிரீஸியா படம் பண்றோம்’’ என கெளதம் நினைத்திருக்கிறார். மியூசிக்கலாக ஒரு கதை சொல்லவேண்டும் என்கிற அவரது எண்ணம் புரிகிறது. ஆனால், திரைக்கதையில் எந்த சுவாரஸ்யமும் இல்லாததால் 'கிட்டார் கம்பி மேலே நின்று' நமக்கு எந்த உணர்வையும் கடத்தவில்லை.

கிட்டார் கம்பி மேலே நின்று - சூர்யா

கால மாற்றத்தைப் புரிந்துகொண்டு முன்னணி நாயகர்களில் முதல் நாயகராக ஓடிடி வெப்சீரிஸில் நடித்திருக்கும் சூர்யாவை நிச்சயம் பாராட்ட வேண்டும். எப்போதும்போல சூர்யா தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தின் தன்மையைப் புரிந்து நடித்துக் கொடுத்திருக்கிறார்.

ப்ரயாகா ரோஸ் மார்ட்டின் கெளதம் மேனன் படங்களில் வரும் அதே டிப்பிக்கல் ஹீரோயினாக கண்களாலேயே பேசுகிறார், சிரிக்கிறார், குழைகிறார். ஆனால், ஸ்கிரீனில் சூர்யா, ப்ரயாகா என இரண்டு நடிகர்கள் இருப்பது தெரியாமல் கெளதம் மேனேனே மாறி மாறி நடித்துக்கொண்டு இருப்பதுபோன்ற உணர்வுதான் வருகிறது.

இசை சம்பந்தப்பட்ட இந்த கதைக்கு கார்த்திக்கின் இசை பலம் சேர்த்திருக்கிறது. பாடல்கள் ரசிக்கும்படி இருக்கின்றன. பி.சி.ஶ்ரீராமின் ஒளிப்பதிவு காட்சிகளை அழகாக்கியிருக்கிறது.

கதை பார்வையாளருக்கும், தனக்கும் சம்பந்தம் இல்லை என்று ரொம்ப தூரம் விலகி வேறு ரூட்டில் போய்க் கொண்டிருந்தாலும், ராயல் என்ஃபீல்டு கொடுக்கும் மைலேஜுக்கு எப்படி இவ்வளவு நேரம் பெட்ரோல் போடாமலேயே இருவரும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்கிற கேள்வி எழுகிறது. பிறகுதான் புரிந்தது கெளதம் மேனன் கதையே இல்லாமல் 45 நிமிடம் சுற்றி வந்திருக்கும்போது பெட்ரோல் எல்லாம் ஒரு மேட்டரே இல்லை என்பது!

உருமாறிய கெளதம் மேனனை கொண்டாட காத்திருக்கிறது தமிழ் சினிமா... சீக்கிரம் வாங்க கெளதம்!



from தமிழ் சினிமா https://ift.tt/3Ak2IpM
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*