``பெண் என்பதால் போலந்து செல்ல அனுமதிக்கவில்லை!" - சோகத்தில் வீராங்கனையின் குடும்பம்

0

கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு பகுதியைச் சேர்ந்த முஜீப், சலாமத் தம்பதியின் மகள் ஷமீஹா பர்வின்(18). முஜீப் மற்றும் சலாமத் ஆகியோர் சுக்கு காபி கடை நடத்தி வருகின்றனர். ஷமீஹா பர்வின் குழந்தை பருவத்திலிருந்தே படிப்பில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். ஆறாம் வகுப்புப் படித்தபோது காய்ச்சலால் அவதிப்பட்ட ஹமீதாவுக்கு அதைத் தொடர்ந்து அவரது காதுகேட்கும் திறன், பேச்சுத்திறன் பறிபோனது. தங்கள் மகளுக்குப் பல இடங்களிலும் சிகிச்சை அளித்தனர் ஹமீதாவின் பெற்றோர். சிகிச்சைக்காக வீட்டை விற்று 20 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் செலவு செய்தும் பலன் இல்லை. வாடகை வீட்டில் வசித்துவரும் அவர்கள் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டனர். இதற்கிடையே தங்கள் மகளுக்கு விளையாட்டில் இருக்கும் ஆர்வத்தையும், திறமையையும் பள்ளி ஆசிரியர்கள் மூலம் பெற்றோர் தெரிந்துகொண்டனர். வறுமைக்கு மத்தியிலும் மகளின் விளையாட்டுக்காக அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தனர்.

ஷமீஹா பர்வின்

Also Read: ``இது எனக்கு ஹாபி மட்டும் இல்ல; எதிர்காலமும்தான்!" - ஓவியத்தில் கலக்கும் அரசுப்பள்ளி மாணவி

நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஓட்டம் என தனது திறமையால் பல பதக்கங்களை வென்றெடுத்தார் ஷமீஹா பர்வின். தேசிய காது கேளாதோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாகத் தங்க பதக்கங்களை பெற்று அசத்தினார். 2020-ம் ஆண்டு உலக தடகளப் போட்டிக்குத் இவர் தேர்வானார். ஆனால் கொரோனா காரணமாக அந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டது. போட்டி ரத்து ஆனாலும் தனது பயிற்சியைக் கைவிடவில்லை.

லாக்டெளன் காலத்திலும் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்ட ஷமீஹா பர்வின் சாதிக்கும் முனைப்பில் வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தார். இந்நிலையில் போலந்து நாட்டில் இம்மாதம் 26-ம் தேதி நடக்க உள்ள நான்காவது உலக காது கேளாதோர் தடகளப் போட்டியில், தமிழகத்திலிருந்து 5 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான தகுதி தேர்வு டெல்லியில் நடப்பதாகவும் தகவல் வந்த போது ஷமீஹா பர்வின் உற்சாகமானார். கடந்த மாதம் 21-ம் தேதி டெல்லியில் நடந்த தகுதித் தேர்வில் நீளம் தாண்டுதல் போட்டியில் அதிக தூரம் தாண்டி நடுவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

பயிற்சியின் போது மாணவி ஷமீஹா பர்வின்

ஆனாலும் அவர் போலந்தில் நடக்கும் உலக காதுகேளாதோர் தடகளப் போட்டியில் கலந்துகொள்ள தடங்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவியும், மாணவியின் பெற்றோரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து ஷமீஹாவின் தாய் சலாமத் கூறுகையில், ``என் மகள் மிகவும் எதிர்பார்ப்புடன் டெல்லிக்குச் சென்றார். இலக்கை தாண்டி திறமையை நிரூபித்தார். ஆனால் டெல்லியிலிருந்து போட்டிக்குத் தேர்வான மாணவி ஒருவர் தகுதி இழந்ததால், என் மகளையும் போட்டிக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் முடிவு எடுத்திருக்கிறார்கள். இந்தியாவிலிருந்து இவர் மட்டுமே பெண்கள் பிரிவில் தகுதி பெற்றுள்ளார். ஒரு பெண்ணை மட்டும் அழைத்துச் செல்வது சிரமம் என இந்திய விளையாட்டுக் கழகம் முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு விளையாட்டு கவுன்சில் அதிகாரிகள் போன் மூலம் தெரிவித்தார்கள்.

என் மகளை டெல்லிக்கு அழைத்துச் செல்லவோ, பாதுகாப்பாக திரும்பி அழைத்து வரவோ அதிகாரிகள் முன்வரவில்லை. ஆகஸ்ட் 26-ம் தேதி போலந்தில் போட்டி நடக்கிறது. என் மகளும், வறுமையில் வாடும் எங்கள் குடும்பமும் கடந்த ஏழு ஆண்டுகளாகப் பல வேதனைகளை அனுபவித்த நிலையில் போட்டியில் கலந்துகொள்ள முடியாத சூழலால் கடும் வேதனையில் இருக்கிறோம். உலக சாம்பியன் ஆக வேண்டும் என்ற ஒற்றை இலக்கை நோக்கிச் செல்லும் பயணத்தில், சொல்ல முடியாத அளவிற்கு சிரமங்களை எதிர்கொண்டார் என் மகள். எனவே, அதிகாரிகள் தங்களின் முடிவை மறுபரிசீலனை செய்யவும், வாய் பேசாத குழந்தையின் வாய்ப்பை பெற்றுக் கொடுக்கவும் ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும்" என்றார்.

ஷமீஹா பர்வின்

Also Read: 11 வயதில் 70 உலக சாதனை; `இளம் யோகா டீச்சர்' பட்டம்; யோகாவில் கலக்கும் சிறுமி பிரிஷா!

இதுகுறித்து மாணவிக்கு ஆதரவாக பல முயற்சிகள் மேற்கொள்ளும் சமூக ஆர்வலர் மாஹின் கூறுகையில், ``மாணவி இப்போது 11-ம் வகுப்புப் படித்து வருகிறார். மாணவிக்கு விளையாட்டில் ஆர்வம் இருந்ததால், விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஈரோட்டைச் சேர்ந்த ஒரு தனியார் பள்ளியில் படிக்க வைத்தனர். நீளம் தாண்டுதலில் 4.2 மீட்டர்தான் மாணவியின் இலக்கு. ஆனால் மாணவி 5 மீட்டர் தூரம் தண்டியுள்ளார். திறமை உள்ள மாணவியைப் பெண் என்பதால் போலந்துக்கு அழைத்துச் செல்ல முடியாது என்கின்றனர். கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி மூலம் மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்துள்ளோம். ஆனாலும் மாணவியை அழைத்துச் செல்லும் வாக்குறுதியை யாரும் கொடுக்கவில்லை. இது சம்பந்தமாக தமிழக முதல்வரையும் சந்திக்க உள்ளோம்" என்றார்.

மாணவி ஹமீதா, ``5 மீ தாண்டியும் பெண் என்பதால் எனக்கு இந்த வாய்ப்புக் கிடைக்காம போயிடுச்சு..." என்று சைகை மொழியில் கூறியது வேதனைக் காட்சி.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3itAC5e
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*