திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கச்சேரி சாலையிலிருக்கும் ஐயப்பன் கோயிலில், நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலை யாத்திரைக்குப் புறப்படுகிறார்கள். இந்த நிலையில், கார்த்திகை நான்காவது சனிக்கிழமையையொட்டி, ஐயப்ப சுவாமிக்கு 10 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் கற்பக விருட்ச சொர்ண அலங்காரம் செய்து பரவசப்படுத்தியிருக்கிறார்கள் வாணியம்பாடியைச் சேர்ந்த பக்தர்கள் சிலர். சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஐயப்ப சுவாமியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பம், குடும்பமாக வந்து தரிசனம் செய்தனர்.
மார்கழி பிறப்பையொட்டி, வரும் வியாழக்கிழமையன்று சிறப்பு அபிஷேகத்துடன்கூடிய அலங்காமும் செய்யப்பட்ட உள்ளது. சனிக்கிழமையன்று கருப்பண்ணசாமி அலங்காரத்திலும் ஐயப்ப சுவாமி காட்சித் தரவுள்ளார். இதையடுத்து, வரும் 26-ம்தேதி மண்டல பூஜைகள் மற்றும் நெய் அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெறவிருக்கிறது. ஜனவரி 14-ம்தேதி திருவீதி உலா நடைபெறும் எனவும் கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோன்று, தமிழக அரசின் விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் பம்பைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக அதிநவீன சொகுசுப் பேருந்து, நாளை முதல் அடுத்த மாதம் நடைபெறும் மகர விளக்குப் பூஜை வரை இயக்கப்பட உள்ளன. வேலூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், குமுளி, எருமேலி வழியாக பம்பைக்கு நேரடியாகப் பேருந்து இயக்கப்படுகிறது.
வேலூரிலிருந்து தினசரி மதியம் 2 மணிக்குப் புறப்படும் பேருந்து மறுநாள் காலை 6 மணிக்கு பம்பையைச் சென்றடையும். பயண நேரம் 16 மணி நேரமாகும். பம்பையிலிருந்து அன்றைய தினம் மதியம் 2 மணிக்கு மீண்டும் வேலூருக்கு அந்தப் பேருந்து புறப்படும். வேலூரிலிருந்து பம்பைக்கு செல்லும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் tnstc.in என்ற இணையதளத்தில் தங்களின் பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 98942-03998, 94450-14463, 94450-14471 என்ற செல்போன் எண்களைத் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3m0euAV
via
