மதுரை மாவட்டம் கீரைத்துறை பகுதியிலிருக்கும் வழக்கறிஞர் ஒருவரின் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீஸாரால் தேடப்பட்டு வந்த நபர், விருதுநகரிலிருக்கும் ஒருவருடன் அடிக்கடி போனில் பேசி வந்தது தெரிய வந்தது. அந்த நபரைத் தேடி வந்த மதுரையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் தியாகப்பிரியன் தலைமையிலான தனிப்படையினர், அந்த செல்போன் டவர் காட்டிய விருதுநகர், வடமலைக்குறிச்சி சாலையிலிருக்கும் புல்லலக்கோட்டை கிராமப் பகுதியில் விசாரணை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக விருதுநகர் ஊரக காவல்நிலைய போலீஸாருக்கும் தகவல் தெரிவித்திருக்கின்றனர். இந்த நிலையில், புல்லலக்கோட்டை கிராமத்திலிருக்கும் கண்மாயின் அருகில் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியரான தேவராஜ் என்பவர், தனக்குச் சொந்தமான தோட்டத்தை வடமலைக்குறிச்சியைச் சேர்ந்த ஒருவருக்கு குத்தகைக்கு விட்டிருக்கிறார். அந்தத் தோட்டத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு 7 பேர் நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரித்துக் கொண்டிருந்தனர்.
இதையடுத்து வெடிகுண்டுத் தயாரிப்பில் ஈடுபட்ட வடமலைக்குறிச்சியைச் சேர்ந்த மாதவன், கருப்பசாமி, மணிமாறன், வீரமல்லன், விஜய், குருசாமி, சின்னராசு ஆகிய 7 பேரையும் போலீஸார் கைது நடத்தினர். அங்கு, 4 நாட்டு வெடிகுண்டுகள், அலுமினிய பவுடர், பால்ரஸ் குண்டுகள், ரப்பர் பேஸ்ட், நூல்கண்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் தரப்பில் பேசினோம். ``கைது செய்யப்பட்ட 7 பேர் மீது ஏற்கெனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வடமலைக்குறிச்சி ஊராட்சி மன்றத் தேர்தலின் போது மாதவன், தங்கப்பாண்டியன் ஆகியோரிடையே முன்பகை இருந்தது வருகிறது. இதனால், அந்த கிராமத்தில் தொடர்ந்து கொலைச் சம்பவங்கள் நடந்து வந்தன. இது தொடர்பாக கடந்த 2013-ல் கொலை வழக்கில் சிறைக்குச் சென்ற மாதவன், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் விடுதலையானார்.
தற்போது மீண்டும் முன்விரோதப் பகையில் தங்கப்பாண்டியன் தரப்பைச் சேர்ந்த சிலர் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்துவதற்காக தன் நண்பர்களுடன் சேர்ந்து நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து வந்திருக்கின்றனர். இந்த வெடிகுண்டுகளைத் தயாரிக்க மதுரையில் இருந்து மூலப்பொருள்களை வாங்கி வந்திருக்கின்றனர்.
அவர்களிடமிருந்து 4 வெடிகுண்டுகளையும், மேலும் சில குண்டுகள் தயாரிப்பதற்கான மூலப்பொருள்களையும் பறிமுதல் செய்திருக்கிறோம். மதுரை வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் தொடர்புடைய நபருக்கும், இவர்களுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.
Also Read: தமிழகத்தை காஷ்மீருடன் ஒப்பிட்டு சர்ச்சை ட்வீட்; யூடியூபர் மாரிதாஸைக் கைதுசெய்தது மதுரை போலீஸ்!
from மாவட்ட செய்திகள் https://ift.tt/33h2J2h
via
