டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மருத்துவமனை எதிரிலிருக்கும் அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி தொகுதியின் எம்.எல்.ஏ-வுமான கடம்பூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் தலைமையில் அ.தி.மு.க., நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல்களைச் சந்தித்திருக்கிறது.
அ.தி.மு.க-வில் இனி இரட்டைத் தலைமைதான் என்பதனை கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏற்றுக் கொண்டு விட்டார்கள். அதற்காக கட்சியின் விதிகளில் சில திருத்தமும் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. அ.தி.மு.க-வைப் பொறுத்தவரையில் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும்தான்.
சசிகலா, டி.டி.வி தினகரன் ஆகியோர் அ.தி.மு-கவில் இணைத்துக் கொள்ளப்படுவர்களா என்ற கேள்விக்கே இடமில்லை. இங்கிருந்து பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்தவர்கள், மீண்டும் கட்சிக்குள் வருவது என்பது நடக்காத ஒரு காரியம். சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் நேற்று அருவருக்கத்தக்க வகையில் அவர்கள் நடந்து கொண்டனர்.
அ.தி.மு.க-வுடன் ஒட்டும் கிடையாது, உறவும் கிடையாது என்ற நிலைப்பாட்டை அவர்களே எடுத்துக் கொண்டனர். ஜெயலலிதாவின் நினைவு நாளை துக்க நாளாக அனுசரிக்க வேண்டிய நேரத்தில், வன்முறையில் ஈடுபட்டனர். ஜெயலலிதா மீது பாசம் இல்லாதவர்கள், மரியாதை இல்லாதவர்கள்தான் இது போன்ற இழிவான செயல்களில் ஈடுபடுவார்கள்” என்றார்.
Also Read: உட்கட்சித் தேர்தலுக்கு எதிராக உண்ணாவிரதம்?! - தொண்டர்களைத் திரட்ட சசிகலா சதுரங்க ஆட்டம்
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3DzFMUM
via
