மாணவ மாணவிகளுக்கு ஒரே உடை... கேரள பள்ளியின் `ஜெண்டர் நியூட்ரல்' சீருடைக்கு ஆதரவும், எதிர்ப்பும்!

0

சமத்துவம் என்பது இடதுசாரி சித்தாத்தில் ஒரு அங்கம். ஆண், பெண் பேதத்தை அகற்றும் நோக்கில் மேல்நிலைப் பள்ளியின் மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் ஒரே மாதிரியான சீருடையை அறிமுகப்படுத்தியிருக்கிறது கேரள அரசு. வழக்கமாக எல்லா ஸ்கூல்களிலும் ஒரே நிறத்தில் உள்ள சீருடைதானே அணிகிறார்களே, இதில் என்ன புதுமை என நீங்கள் கேட்கலாம். ஒரே நிறத்தில் மாணவர்கள் பேண்ட், சட்டையும், மாணவிகள் பாவடை, டாப் அல்லது சுடிதார் ஆகியவை அணிவார்கள். அதில் நிற ஒற்றுமை மட்டுமே இருக்கும். ஆனால் கேரள பள்ளிகளில் மாணவர்களைப் போன்று மாணவிகளுக்கும் பேண்ட், சர்ட் ஆகியவை யூனிபாமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு இந்த சீருடை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுவிட்டது. இது ஆண், பெண் என்ற பேதத்தை ஒழிக்கும் முயற்சி என அரசு சார்பில் கூறப்படுகிறது.

கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து

கொரோனா ஊரடங்கில் தளவுகளுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவ, மாணவிகளின் சீருடையில் புதுமை புகுத்தப்பட்டுள்ளது. ஜெண்டர் நியூட்ரல் யூனிஃபார்ம் கேரள மாநிலம் பாலுசேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து அறிமுகப்படுத்தினார். இதுகுறித்து பாலுசேரி அரசுப்பள்ளி மாணவிகள் கூறுகையில், "சுடிதாரை விட இந்த யூனிஃபார்ம் தங்களுக்கு செளகரியமாக உள்ளது. விரும்புகிறவர்கள் துப்பட்டாவும் அணிந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஜீன்ஸ் பேண்ட் அணியும் வழக்கம் எங்களுக்கு உள்ளது. எங்கள் பெற்றோரும் இந்த சீருடைக்கு ஆதரவாக உள்ளனர். பள்ளியில் வாலிபால் போன்ற விளையாட்டுகளுக்காக களத்தில் இறங்கும்போது இந்த சீருடை அணிவதால் பாதுகாப்பாக உணர்கிறோம்" என்கிறார்கள்.

சமத்துவத்துக்கான மாற்றங்கள் மாணவர்களிடம் இருந்து தொடங்க வேண்டும் என்பதால் படிப்படியாக அனைத்து அரசுப்பள்ளிகளிலும் செயல்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கிடையே 'வேஷம் மாறினால் சமத்துவம் பிறக்குமா' என்ற கேள்வியோடு சில அமைப்புகள் ஜெண்டர் நியூட்ரல் யூனிஃபார்முக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக எம்.எஸ்.எஃப், யூத் லீக் போன்ற முஸ்லிம் மத அமைப்புகள் சமத்துவ சீருடைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கேரள அரசுப் பள்ளிகளில் 'ஜெண்டர் நியூட்ரல் யூனிஃபாம்'

"சமத்துவம் என்ற பெயரில் மாணவிகளுக்கு வலுக்கட்டாயமாக சீருடை திணிக்கப்படுவதாகவும். கருத்துக்கேட்கப்பட்ட கணிப்பு நடத்தி இதற்கான முடிவை எடுத்திருக்க வேண்டும். நம்பிக்கை, உடை, உணவு ஆகியவற்றில் யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது. சமத்துவம் என்ற பெயரில் ஏன் ஆண்களின் பேண்ட், சர்ட்டுகளை பெண்களுக்கு அணிவிக்க வேண்டும். சமத்துவ சீருடை தொடக்க நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் ஆர்.பிந்து சேலையிலும், எம்.எல்.ஏ வேட்டி, சட்டை அணிந்தும் வந்துள்ளனர். அவர்களின் உடையை தேர்ந்தெடுக்க உரிமை இருக்கும்போது, மாணவிகளுக்கு அந்த உரிமை இல்லையா" என எதிர்ப்பாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

"ஆடை சுதந்திரம் என்பதற்காக பள்ளிக்கு வரும் மாணவிகள் சீருடை அணியாமல், வேறு வண்ண ஆடை அணிந்து வரமுடியுமா. எந்த மாற்றமாக இருந்தாலும் முதலில் எதிர்ப்பு வருவது இயல்புதான். பின்னர் அதை சமூகம் ஏற்றுக்கொள்ளும். சமத்துவ சீருடையை எதிர்ப்பவர்கள் எதிர்க்கப்பட வேண்டியவர்கள்" என்ற பாலுசேரி அரசுப் பள்ளி ஆசிரியைகள்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3IT9Nm8
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*