தஞ்சாவூர் அருகிலிருக்கும் மேலவெளி மனோ நகரைச் சேர்ந்தவர் ராஜா (38). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். அத்துடன் திருவையாற்றில் டீக்கடையும் நடத்தி வந்தார். இவர் மனைவி கனகதுர்கா (32 ). மகன் ஸ்ரீவத்சன் (11). தனியார்ப் பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், ராஜா தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், பல பேரிடம் கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியாமல், மன உளைச்சலிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்ததால், செய்வதறியாது திகைத்து நின்ற கணவனும், மனைவியும் தற்கொலை செய்துகொள்வதென முடிவு செய்திருக்கின்றனர். தாங்கள் தற்கொலை செய்து கொள்ளப்போவது குறித்து, ராஜா புதுக்கோட்டையில் வசிக்கும் தன் சகோதரர் வினோத்துக்கு வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியிருக்கிறார். பின்னர், அந்த தம்பதி தங்கள் மகன் ஸ்ரீவத்சனின் கழுத்தை நெரித்து அவரை கொலை செய்து விட்டு, கயிறு மூலம் தாங்களும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
ராஜா அனுப்பிய மெசேஜை அவரின் சகோதரர் சிறிது நேரம் கழித்துப் பார்த்திருக்கிறார். அதில், ``கடன் தொல்லை அதிகமாகி விட்டது. அதனால், நாங்கள் தற்கொலை செய்துகொள்கிறோம்" என்று ராஜா குறிப்பிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அதைக் கேட்டு அதிர்ந்து போன ராஜாவின் சகோதரர், உடனடியாக தன் உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்து விட்டு, போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தார்.
அதையடுத்து, ராஜாவின் வீட்டுக்கு விரைந்த கள்ளப்பெரம்பூர் போலீஸார், தூக்கில் தொங்கி கிடந்த தம்பதியின் உடல்களையும், படுக்கையறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சிறுவனின் உடலையும் மீட்டனர். உடல்களைப் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடன் தொல்லையால் சிறுவனைக் கொன்றுவிட்டு, தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Also Read: தஞ்சாவூர்: அரசு மருத்துவமனை கழிவறைத் தொட்டிக்குள் பெண் சிசுக்கொலை! - சிசிடிவி மூலம் விசாரணை
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3oqTCEi
via
