தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை அடுத்த பேய்க்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம். இவர், ஆடுகளை வளர்த்து வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு, இரண்டு ஆடுகளை அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த நாய் ஒன்று கடித்திருக்கிறது. அதனால், ஆத்திரமடைந்த சுந்தரம், தன் நண்பர்களான இசக்கிமுத்து, குமார் ஆகியோருடன் சேர்ந்து கடந்த 4-ம் தேதி, முசலைக்குளம் பகுதியில் ஆடுகளைக் கடித்த தெரு நாயை, கம்பு மற்றும் கல்லால் அடித்துக் கொன்றார்.
இவர்கள் மூவரும் நாயை அடித்துக் கொன்றதை அந்தப் பகுதியைச் சேர்ந்த யாரோ ஒருவர், செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோ வைரலானது. அந்த வீடியோவில், ``சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதியில் ஆட்டை கடித்த நாயை கொடூரமாக அடித்துக் கொன்ற மிருகங்கள்!” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வீடியோ வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதையடுத்து, ``நாயை கொடூரமாக அடித்துக் கொன்ற, மூவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஜெயக்குமாருக்கு மக்கள் வாட்ஸ் அப் மூலம் புகார் அனுப்பினர். அதன்பேரில், நாயைத் தாக்கிக் கொன்ற மூன்று பேரையும் கைது செய்திட சாத்தான்குளம் டி.எஸ்.பி ராஜூ மற்றும் சாத்தான்குளம் காவல் நிலையப் போலீஸாருக்கு எஸ்.பி உத்தரவிட்டார்.
இது தொடர்பாக சாத்தான்குளம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, நாயைக் கொன்ற சுந்தரம், இசக்கிமுத்து ஆகிய இருவரையும் கைது செய்தனர். குமாரைத் தேடி வருகின்றனர்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பரமக்குடியில் சாலை ஓரத்தில், வளர்ப்பு நாய் ஒன்றைப் பேரூராட்சியின் ஊழியர் இரும்புக்கம்பியால் கொடூரமாகத் தாக்கினார். அதில் அந்த நாய் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து அந்த ஊழியர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், தூத்துக்குடியில் நாயை, கம்பால் அடித்துக் கொன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது போன்று விலங்குகள் மீது கொடூரமாகத் தாக்குதலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்கின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Also Read: `முகக்கவசம் அணியாததற்கு அபராதம்; போலீஸ்மீது நாயை ஏவிவிட்ட கடைக்காரர்!' - மும்பையில் பரபரப்பு
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3orGnDB
via
