புதுச்சேரியில் வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணியை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கடந்த மாதம் தொடங்கி வைத்தார். அதையடுத்து, சுகாதாரப் பணியாளர்கள் வீடுகள்தோறும் சென்று தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பதுடன், அதற்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், வில்லியனூரை அடுத்த ஒதியம்பட்டு பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாடோடி பழங்குடியின இன மக்களுக்கு செஞ்சிலுவை சங்கம் மூலம் நிவாரண பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில் கலந்து கொண்ட துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அந்த மக்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கினார்.
அதையடுத்து மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டார். தொடர்ந்து அந்த பகுதி மக்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து தரும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அங்கிருந்த குழந்தைகளுக்கு பாடபுத்தகங்கள், நோட்டுகள் மற்றும் எழுது பொருள்களை வழங்கினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், ``ஒதியம்பட்டு பகுதியில் நரிக்குறவர் சமுதாய பெண்கள் கழிப்பறை வசதி வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். நிரந்தரமான கழிப்பறைகள் கட்டுவதற்கு முன்பாக, ஒரு நடமாடும் கழிப்பறையை உடனடியாக நிறுத்தும்படி சுகாதாரத்துறை மற்றும் செஞ்சிலுவை சங்க அதிகாரிகளிடம் கூறியிருக்கிறேன்.
மேலும், நிரந்தரமாக கழிப்பறைகள் கட்ட ஏற்பாடு செய்திருக்கிறேன். அதற்கு பின் வீடுகள் கட்டித்தர ஏற்பாடு செய்யப்படும். முதல்வருடன் ஆலோசனை நடத்தி அதற்கான முடிவு எடுக்கப்படும். புதுச்சேரியில் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறோம். இது பொதுமக்களின் நலனுக்காக மட்டுமே. பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது" என்றார். அப்போது அவரிடம், ``மத்திய அரசு புதுச்சேரியை புறக்கணிக்கிறது என்றும், இதுதொடர்பாக பொது இடத்தில் விவாதிக்க தயாரா? என்றும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியிருக்கிறாரே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
Also Read: விநாயகர் சிலைக்கு அனுமதி ஏன்? – புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறும் காரணம்!
அதற்கு, ``இது விவாதிக்கும் நேரம் இல்லை. மத்திய அரசு புதுச்சேரி மீது தனி கவனம் செலுத்தி வருகிறது. புதுச்சேரியில் நிர்வாக ரீதியாக அனைத்தும் சரியாக நடந்து வருகிறது” என்று பதிலளித்தார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3psbkXn
via
