நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 28-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. தில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு 1,374 பேருக்கு நேரடியாக பட்டங்களை வழங்கினார். பட்டங்களைப் பெற்றவர்களில் 204 பேர் தங்கப் பதக்கங்கள் பெற்றார்கள்.
கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக பட்டமளிப்பு விழா நடக்காததால், அவர்களுக்கும் சேர்த்து பட்டம் பெறத் தகுதியுடையவர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அதனால் மொத்தம் 1,09,527 பேர் பட்டம் பெற்றனர்.
பொதுவாக, பட்டம் வழங்கும் நிகழ்ச்சிகளில் தலைமையேற்பவர்கள் பட்டங்கள் வழங்கிய பின்னர் உரையாற்றுவதில்லை. ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி, தான் பங்கேற்கும் விழாக்களில் பட்டமளித்த பின்னர் தலைமையுரை ஆற்றுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதன்படி நெல்லை மனோனமணியம் சுந்தரனால் பல்கலைக்கழகத்திலும் அவர் பேசினார்.
அவர் பேசுகையில், “தென் தமிழகத்தில் இந்தப் பல்கலைக்கழகம் அமைந்திருக்கிறது. இங்கு கால்வைத்ததும் எனக்குள் உணர்ச்சிப் பெருக்கு ஏற்பட்டதை உணர முடிந்தது. இந்த மண் பல வரலாற்றுச் சிறப்புக்களைக் கொண்டது. மகாகவி சுப்பிரமணிய பாரதியார் நாட்டுப் பற்றை ஊட்டும் வகையில் பல கவிதைகளைப் பாடியுள்ளார். அவரின் பாடல்களை தமிழில் படித்தால் தான் உணர்ச்சிப்பூர்வமாக முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். இருந்தாலும் நான் ஆங்கிலத்தில் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.
இந்த மண் வ.உசிதம்பரனார், கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை, வீரபாண்டிய கட்டபொம்மன், செண்பகராமன் பிள்ளை என பல புகழ்பெற்ற தலைவர்களை நாட்டுக்குத் தந்திருக்கிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள், வெற்றியை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும். லட்சியத்தை அடையும் வரை தொடர்ந்து போராடவேண்டும்.
புதிய கல்விக் கொள்கை என்பது ஒருங்கிணைந்த வளர்ச்சியை உள்ளடங்கியதாக இருக்கும். ஆய்வுகள் மற்றும் அதன் மூலமான புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ற வகையிலேயே தேசிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டிருக்கிறது.
மாணவர்களின் எதிர்கால பார்வை உயர்வானதாக இருக்கவேண்டும், பல்கலைக்கழக பேராசிரியர்கள் தங்களின் மாணவர்களை வேலை கொடுப்பவர்களாக உருவாக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கை புதிய ஆராய்ச்சிக்கு ஊக்கமளிக்கிறது.
பாரம்பரியத்தையும், நவீன அறிவியலையும் ஒருங்கிணைப்பதுதான் புதிய கல்விக்கொள்கை இதைப் பகுத்துணர்ந்து புதிய ஆராய்ச்சிகளை உருவாக்கவேண்டும். அதற்குப் பல்கலைக்கழகம் முக்கியத்துவம் அளிக்கவேண்டும்” என்று அளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
விழாவில் திருவனந்தபுரம் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணைவு புல கழகத்தின் இயக்குநர் அஜய்கோஷ் பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார். உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில், ``இந்தியா முழுவதும் உயர்கல்வி பெறுவோர் எண்ணிக்கை 21.4 சதவிகிதமாக உள்ள நிலையில் தமிழகத்தில் 41.4 சதவிகிதமாக உயர்கல்வி பெறுவோர் எண்ணிக்கை இருப்பதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
இந்த விழாவில் உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல்வஹாப், ராஜா, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3s4rOIg
via
