தனக்கென அடையாளம் ஏதுமின்றி கூலி வேலைக்குச் செல்லும் புஷ்பா எனும் புஷ்பராஜ், செஞ்சந்தன மரம் வெட்டினால் காசு என அந்தப் பக்கம் எட்டிப் பார்க்க, அந்தக் கடத்தல் பிசினஸ் உலகம் அவரை ஈர்த்துக் கொள்கிறது. தன் மூளையால், அந்தத் தொழிலின் பல படிநிலைகளைச் சிரமமின்றி கடக்கும் புஷ்பா, இந்தப் பயணத்தில் சந்திக்கும் வில்லன்களும் அவர்களால் உண்டாகும் பிரச்னைகளும்தான் கதை.
தன் முந்தைய படமான 'ரங்கஸ்தலம்' மூலம் தெலுங்கு சினிமாவுக்கு புது ரத்தம் பாய்ச்சியவர் இயக்குநர் சுகுமார். இவர் இதற்கு முன்னர் அல்லு அர்ஜுனுடன் இணைந்த 'ஆர்யா' (தமிழில் தனுஷின் 'குட்டி'), 'ஆர்யா 2' இரண்டுமே மெகா ஹிட் படங்கள் என்பதால் இந்தக் கூட்டணி மீண்டும் இணையும் 'புஷ்பா'வின் மீது எதிர்பார்ப்பு கூடியது. அதுவும் இரண்டு பாகங்களாக வெளிவரவிருக்கும் படம், பல மொழிகளில் வெளியாகும் Pan India படம் எனக் கூடுதலாக பல்வேறு ப்ளஸ்கள். ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளம், தேவி ஶ்ரீ பிரசாத்தின் வைரல் பாடல்கள், சமந்தாவின் 'ஊ சொல்றியா' பாடலுக்கு எழுந்த எதிர்ப்பும், ஆதரவும் என அல்லு அர்ஜுனைத் தவிர்த்தும் படத்தில் பல விஷயங்கள் கவனிக்கத்தக்கவையாக இருந்தன. அந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்கிறதா படம்?
படம் முழுக்கவே அல்லு அர்ஜுனின் ராஜ்ஜியம்தான். தோளை ஒரு பக்கமாகச் சாய்த்து நடக்கும் மேனரிசம், அனல் வீசும் பன்ச் வசனங்கள், மனதில் பட்டதைச் செய்யும் தைரியம் என ஒரு பக்கா தெலுங்குப் பட ஹீரோவாகத் திரையை ஆள்கிறார் இந்த 'புஷ்பா'. நடனக் காட்சிகள், ஸ்டன்ட் காட்சிகள் என எல்லாவற்றுக்கும் வழக்கம்போல தன் நூறு சதவிகித உழைப்பைக் கொடுத்து கவனம் ஈர்க்கிறார். ராஷ்மிகா மந்தனாவுக்கு வழக்கம்போல 'காதலிக்கப்படுவீர்கள் டோலி' பாத்திரம். பின்னர் அவருமே காதலில் விழுந்து 'சாமி சாமி' எனச் சுற்றி வருகிறார்.
டஜன் கணக்காகக் களமிறங்கும் வில்லன்களில் மங்களம் ஶ்ரீனுவாக வரும் சுனிலும், கொண்டா ரெட்டியாக வரும் அஜய் கோஷும் மிரட்டுகிறார்கள். இந்த இருவருக்கும் இடையேயான பனிப்போரில் நேரடி போர்வாளாக அதகளம் செய்திருக்கிறார் 'புஷ்பா' அல்லு அர்ஜுன். குறிப்பாக சுனிலின் இந்த வில்லன் முகம் அவர் கரியரில் ஒரு மைல்கல்லாக மாறலாம். புஷ்பாவின் கூடவே வரும் கேசவன் பாத்திரம் மூலமாகக் கதையை நகர்த்தும் யுக்தி சுவாரஸ்யம்தான் என்றாலும், ரொமான்ஸ் காட்சிகளில் சற்றே ரிவர்ஸ் கியர் போடுகிறது திரைக்கதை.
தேவி ஶ்ரீ பிரசாத்தின் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்குப் பெரும்பலம் சேர்த்திருக்கின்றன. பழங்கதையாகிவிட்ட ஐந்து பாடல்கள், ஐந்து சண்டைக் காட்சிகள் ஃபார்முலா இந்தப் படத்தில் எடுபடுவதற்கு மிக முக்கியக் காரணமே அவர்தான்.
தேசிய அளவில் வெவ்வேறு மொழிகளில் ரிலீஸாகவிருக்கும் பிரமாண்ட படம் எனும்போது, அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் வகையில் ஜனரஞ்சகமான படத்தைத் தருவது ரிஸ்க்கில்லாத வேலைதான் என்றாலும், 'புஷ்பா'வில் தெலுங்கு மசாலாவின் வாடையே தூக்கலாக அடிக்கிறது. அதிரடி சண்டைக் காட்சிகள், மாஸ் ஹீரோயிஸ காட்சிகள் ஈர்த்த அளவிற்குப் படத்தின் எமோஷனல் காட்சிகள் ஈர்க்கவில்லை. குறிப்பாகக் காதல் காட்சிகள் பழங்கால தெலுங்கு, தமிழ் சினிமாவை நினைவூட்டிச் சலிப்பை ஏற்படுத்துகின்றன. 'பேஜர்' காலத்து படம்தான் என்றாலும், இன்னும் எத்தனை காலத்துக்குப் பெண்களைப் போகப்பொருளாகப் பயன்படுத்தும் 'ஊரின் மைனர்' ரக வில்லன் பாத்திரங்களை வைப்பார்கள் என்று தெரியவில்லை.
'புஷ்பா' எனும் கடத்தல்காரன் ஒரு தனிமனிதன். அவனின் எழுச்சிதான் ஒன்லைன் என்றாகிவிட்ட பிறகு அவனின் நியாய தர்மங்களை இன்னமும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கலாம். சரி, தவறு குறித்த அவரின் அரசியல் பார்வை புரியாத புதிராக மட்டுமே இருக்கிறது. "இந்த உலகம் உங்க கையில துப்பாக்கியைக் குடுத்துச்சு, என் கையில கோடாலியை குடுத்துச்சு" என ஷார்ப்பான வசனங்கள் படம் நெடுக இருந்தாலும், அப்படியான தத்துவார்த்தங்கள் வெறும் வார்த்தைகளாக மட்டுமே கடந்துபோகின்றன. கிளைமாக்ஸில் ஃபகத் ஃபாசிலுக்கும், அல்லு அர்ஜுனுக்கும் நடக்கும் அந்த உரையாடல் மட்டுமே அத்தகைய விஷயங்களைத் தொட்டுச் செல்கிறது. அதைத் தவிர்த்துவிட்டு பார்த்தால் மாஸ் மசாலாவுக்குள் மட்டுமே அடம்பிடித்துக் குதிக்க நினைக்கிறது திரைக்கதை.
மாஸ் மீட்டரைக் குறைத்து, கொஞ்சம் அரசியலும் பேசியிருந்தால் இந்த 'புஷ்பா'வுக்கு நாமும் ஃபயர் விட்டிருக்கலாம். மற்றபடி, ஒரு பக்கா தெலுங்கு சினிமாவை மட்டுமே எதிர்பார்த்துச் செல்பவர்களுக்குக் குறையேதுமில்லை!
from தமிழ் சினிமா https://ift.tt/3E4fYQS
via
