செந்தில் பாலாஜியின் 24 மணி நேர கெடு... ஆதாரத்தை இன்று வெளியிடுகிறாரா அண்ணாமலை?

0

``மின் வாரியம் ஒப்பந்தம் சம்பந்தமாக குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லையென்றால் வழக்கு தொடர்வேன்” என்று 24 மணி நேர கெடு விதித்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் எச்சரிக்கைக்கு, இன்று மாலை 5 மணிக்கு அண்ணாமலை பதில் அளிக்க உள்ளதாக பாஜகவினர் கூறும் தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மின் வாரியம்

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசும்போது, ``தமிழக மின்சார வாரியம் 4,442 கோடி ரூபாய் மதிப்பிலான மின் திட்ட ஒப்பந்தத்தை அனைத்து விதிகளையும் மீறி நஷ்டத்தில் இயங்கும் பி.ஜி.ஆர் நிறுவனத்திற்கு மார்ச் 10-தேதி வழங்கியுள்ளது. இது திமுகவுக்கு வேண்டிய நிறுவனம்.

கடந்த 2019 -ல் சென்னை எண்ணூரில் அனல் மின் நிலையம் அமைக்க மின் வாரியம் ஒப்பந்தம் வழங்கியபோது, இதற்கான கடனை மத்திய அரசின் பவர் பைனான்ஸ் கார்பரேஷன் வழங்க இருந்த நிலையில், 440 கோடி ரூபாய் வங்கி உத்தரவாதம் அளிக்க முடியாததால் இந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்புதல் கடிதத்தை ரத்து செய்தது.

அண்ணாமலை

இப்படி அந்த நிறுவனம் காகிதத்தில் மட்டுமே இருக்க கூடியது. லாபம் ஈட்டும் நிறுவனம் அல்ல. கடந்த நிதியாண்டில் அந்நிறுவனத்தின் இழப்பு 355 கோடி ரூபாய். மிக குறைந்த தொகை மட்டுமே வங்கியில் இருப்பு வைத்துள்ளது. ஒப்பந்தம் ரத்து செய்யப்படதை எதிர்த்து பி.ஜி.ஆர் நிறுவனம் தொடுத்த நீதிமன்ற வழக்கில் திமுக எம்பி வில்சன் ஆஜரானார்.

இப்படி ஒன்றுமே இல்லாத அந்த நிறுவனத்துக்கு மின்வாரிய ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தில் மூன்றாவது நபர் ஒருவர் முதலீடு செய்துள்ளார். கோபாலபுரத்துக்கும் பிஜிஆர் நிறுவனத்துக்கும் நேரடி தொடர்பு உள்ளது. இதுதான் திராவிட மாடல். இந்த முறைகேடுகளை முழுமையாக வெளி கொண்டு வர பாஜக போராடும்" என்று கூறியிருந்தார்.

இவர் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் உடனே பேட்டியளித்த மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ``திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட எண்ணூர் விரிவாக்க மின் திட்டம் 10 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டு கடந்த 2018-ல் டெண்டர் கோரப்பட்டதில் பி.ஜி.ஆர், பெல் ஆகிய இரு நிறுவனங்கள் பங்கேற்றன. பி.ஜி.ஆருக்கு அனுமதி வழங்கப்பட்டது. வைப்புத் தொகை கட்டாத நிலையில் அதன் ஒப்பந்தம் ரத்தானது. இதை எதிர்த்து பி.ஜி.ஆர் நிறுவனம் நீதிமன்றம் சென்றது.

செந்தில் பாலாஜி

மின் திட்டங்களுக்கான வைப்புத்தொகையை 10-லிருந்து 3 சதவிகிதமாக குறைத்து மத்திய அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியது. அதிமுக ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்ட 4,442 கோடி ரூபாய் திட்டத்தை ஒரு ரூபாய் கூட உயர்த்தாமல் அதே மதிப்பீடில் பணி வழங்கப்பட்டுள்ளது.

பி.ஜி.ஆர் நிறுவனத்தில் கோபாலபுரம் நிதி முதலீடு செய்துள்ளது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டை அவர் சொன்னார் என்பதை 24 மணி நேரத்துக்குள் அவர் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியிருந்தார்.

இருவரின் பேட்டியும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று காலை கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மதுரை வந்திருந்த அண்ணாமலை இது குறித்து ஆதாரங்களை வெளியிடுவார் என செய்தியாளர்கள் மதுரை விமான நிலையத்தில் காத்துக்கிடந்தனர்.

24 மணி நேர கெடு குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேட்டதற்கு, ``மாலை 5 மணிக்கு பதில் சொல்கிறேன்" என்று கூறிவிட்டு கிளம்பினார். 5 மணிக்கு ஆதாரங்களை வெளியிடுவாரா என்பதுதான் இப்போது எதிர்பார்ப்பாக உள்ளது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/5PptBzC
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*