கோவை ஆவாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலதண்டபானி. டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். ஆலாந்துறை பகுதியில் தன் விவசாய நிலத்தை, அவர் கடந்த 2013-ம் ஆண்டு விற்பனை செய்துள்ளார். 60 ஏக்கர் மதிப்புள்ள நிலத்தை ரூ.10 கோடிக்கு விற்றது தொடர்பாக, சில ஆண்டுகளுக்கு முன்பு பாலதண்டபாணி வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் ரெய்டும் நடத்தியுள்ளனர்.
அப்போது, “அரசின் வழிகாட்டு முறையை பின்பற்றவில்லை. நிலத்தை விற்பனை செய்த பணத்துக்கு வருமான வரி செலுத்த வேண்டும்.” என்று கோவை வருமான வரித்துறை துணைஆணையர் டேனியல் ராஜ் கூறியுள்ளார்.
ஆனால், பாலதண்டபானி தான் முறைப்படி தான் செலுத்தியதாக பதில் அளித்துள்ளார். டேனியல் ராஜ் அவரை தன் அலுலகத்துக்கு வரவழைத்து, “முறையாக வரிகட்டுங்கள். இல்லையேல் எனக்கு ரூ.5 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார். இரண்டு தரப்பினரும் பேசி, ரூ.2.5 லட்சத்துக்கு உடன்பாடு ஆகியுள்ளனர்.
இதற்கு ஆடிட்டர் ஶ்ரீதரன் என்பவர் இடைத்தரகராக செயல்பட்டுள்ளார். இதுகுறித்து பாலதண்டபானி சிபிஐ அதிகாரிகளிடம் புகார் அளித்தார். சிபிஐ அறிவுறுத்தலின் பேரில் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு சென்றார் பாலதண்டபானி.
ரசாயனம் தடவிய ரூ.50 லட்சத்தை ரொக்கமாகவும், ரூ. 2 லட்சத்துக்கு காசோலையாகவும் டேனியலிடம் வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த சிபிஐ அதிகாரிகள் டேனியலையும், ஸ்ரீதரனையும் கைது செய்தனர். டேனியல் தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகளிடம் கூறினார்.
இதனால், கோவை அரசு மருத்துவமனையில் அவருக்கு சோதனை செய்தனர். அங்கு அவருக்கு உடல்நலக்குறைவு இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து இருவரையும் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட இருவருக்கும் வருகின்ற ஏப்ரல் 6-ம் தேதிவரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. “டேனியல் மற்றும் ஶ்ரீதரன் சம்மந்தப்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.5.75 லட்சம் பணம், குற்றச்சாட்டுக்குள்ளான சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்று சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/LgOQB9N
via
