உலகிலேயே முதன்முறையாக மான்களில் ஒமிக்ரான்.. எப்படி பரவியது?.. அதிர்ச்சியில் உறைந்த அமெரிக்கா..! | american scientists detect Omicron variant for first time in deer
வாஷிங்டன்: வெள்ளை வால் மான்களிடம், 'ஒமைக்ரான்' வகை கொரோனா வைரஸ் இருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
கடந்த 2 வருடங்களாகவே, கொரோனாவைரஸ் உலகையே கட்டிப்போட்டு வரும் நிலையில், விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை.. இதனால் பல விலங்குகள் உலகம் முழுவதும் உயிரிழக்கவே செய்தன.

இதுகுறித்து ஆய்வுகளும் நடந்து கொண்டுதானிருக்கின்றன.. அந்த வகையில், விலங்குகளுக்கிடையில் வைரஸ் பிறழ்வடைந்து மனிதர்கள் மத்தியில் புதிய தொற்று பரவல்களை ஏற்படுத்தும் சாத்தியம் குறித்தும் விலங்கு நல அறிவியலாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

32 நாடுகளில் சிங்கம், புலி, பூனை, நாய், லிங்ஸ், மிங்க் வரை பல உயிரினங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக, உலக விலங்கு நல அமைப்பு கூறியிருந்தது.. ஆனால், இந்த விலங்குகளில், கிட்டத்தட்ட அனைத்தும் உயிரியல் பூங்காக்கள் மற்றும் கூண்டுகளில் அடைக்கப்பட்டு இருந்ததால் மற்ற விலங்குகளுக்கு பரவாமல் பாதிப்பு ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது... இந்நிலையில், அமெரிக்காவில், அயோவா மாகாணத்தில் வாழும் மான்களை வைத்து விஞ்ஞானிகள் ஒரு ஆய்வு நடத்தினார்கள்..
கடந்த டிசம்பர் 12-ந் தேதியில் இருந்து ஜனவரி 31-ந் தேதிவரை, மொத்தம் 131 வால் மான்களில் இருந்து ரத்த மாதிரியை சேகரித்தனர்.. அவற்றை ஆய்வும் செய்தனர்.. அதில், 19 மான்களில் கொரோனாவால் ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது... மூக்கு சளி மாதிரி எடுக்கப்பட்ட 68 மான்களில் 7 மான்களின் மூக்கில் கொரோனா வைரஸ் உயிருடன் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த மான்களின் மாதிரிகளை மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்தியபோது, வெள்ளை நிற மான்கள் சிலவற்றில் ஒமைக்ரான் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது... மாதிரி எடுக்கப்பட்ட வெள்ளை நிற மான்களில் 80 சதவீத விலங்குகளில் ஒமைக்ரான் இருந்துள்ளது... இந்த மான்கள் நியூயார்க்கில் ஸ்டேடன் தீவில் வாழ்ந்து வருகின்றனவாம்..
தீவுக்குள் எப்படி சுதந்திரமாக வாழ்ந்து வரும்போது தொற்று பரவியிருக்கும் என்பது வியப்பாக உள்ளதாம்.. உயிரினங்களில் இப்படி ஒமிக்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல்முறை ஆகும்... காரணம், நியூயார்க்கில் மனிதர்களிடம்தான் இந்த ஒமிக்ரான் அறிகுறி தென்பட்டது.. இப்போது மனிதர்களிடம் இருந்து மான்களுக்கும் பரவி உள்ளது தெரியவந்துள்ளது..
சில மான்களில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதால், மனிதர்களை போலவே இந்த மான்களுக்கும் மீண்டும் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பது தெரிய வந்துள்ளது. மான்களிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவுவது தொடர்பாக இதுவரை உறுதியான ஆதாரம் கிடைக்கவில்லை என்றாலும், இந்த ஆய்வு அடுத்தக்கட்ட முயற்சியிலும் விஞ்ஞானிகளை ஈடுபட வைத்துள்ளது.
தமிழ்நாட்டின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு ஒன்இந்தியா தமிழ் டெலிகிராம் சானல்
