ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதேவி. உலர் பழங்களை விற்பனை செய்து வருகிறார். தொழில் நிமித்தமாக கடன் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரது செல்போனுக்கு, கமிஷனுக்கு கடன் பெற்றுத்தரப்படும் என்று ஓர் எஸ்.எம்.எஸ் வந்தது.
இதையடுத்து, ஶ்ரீதேவி அந்த எண்ணை தொடர்பு கொண்டுள்ளார். எதிரில் பேசியவர், தான் கோவையை சேர்ந்த கௌதம் என்றும், பணம் ஏற்பாடு செய்வதாகவும் கூறியுள்ளார்.
``ரூ.1 கோடி கடன் பெற்று தருகிறேன். எனக்கு ரூ.10 லட்சம் கமிஷன் தர வேண்டும்.” என்று கௌதம் கூறியுள்ளார். அதை ஏற்றுக் கொண்ட ஸ்ரீதேவி, தன் மகன் ரமணா மூலம் பணத்தை கொடுத்து அனுப்பியுள்ளார். கோவை ரேஸ்கோர்ஸ் பகுதி அருகே ரமணாவை வருமாறு கூறியுள்ளனர்.
ரமணா அங்கு வந்த போது, அட்டை பெட்டி ஒன்றை கொடுத்து, இதில் ரூ.1 கோடி பணம் இருப்பதாக கூறியுள்ளனர். இதை நம்பி ரமணா அவர்களிடம் ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்ற சில நொடிகளில் கௌதம் உள்ளிட்டோர் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றுவிட்டனர்.
சந்தேகத்துடன் ரமணா பெட்டியை திறந்து பார்த்துள்ளார். அப்போது, அதில் சில பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் பிரஷ்கள் மட்டும் இருந்துள்ளன. இதுகுறித்து, ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீஸார், இரண்டு பேரைக் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் தங்களது பெயரை மாற்றி மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது.
மோசடியில் ஈடுபட்டது, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த ஜனகன்(42), செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த மார்டின் அமல்ராஜ்(42) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும், அவர்களிடமிருந்து ரூ.6 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/dIhLoYz
via
