தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம்: 'பெருவுடையாரே' கோஷம் முழங்க வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

0

உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில் தோரோட்டம் கொரோனா பரவல் காரணமாக நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வெகு விமர்சையாக தேரோட்டம் நடைபெற்றது. 'ஆருரா,நமச்சிவாயா, தேனாரமுதா,பெருவுடையாரே' கோஷங்கள் முழங்க ஏராளமான பக்தர்கள் உற்சாகம் பொங்கத் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தஞ்சாவூர் பெரிய கோயில் தேர்

மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சாவூர் பெரிய கோயில் 1,000 ஆண்டுகளைக் கடந்தும் அழகுறக் காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறது. பெரிய கோயிலின் கட்டமைப்பும், அதன் பிரமாண்டமும் அதனைக் காண்பவர்களுக்கு எப்போதும் சிலிர்ப்பைத் தந்து வருகிறது. உலகம் முழுவதிலிருந்தும் தினமும் ஏராளமானோர் பெரிய கோயிலுக்கு வந்து செல்கின்றனர். பிரதோஷ நாள்களில் பெரியகோயிலில் உள்ள மகாநந்திக்கு நடைபெறும் சிறப்பு அபிஷேகத்தை காண ஆயிரகணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.

இத்தகைய தனி சிறப்புகளை கொண்ட தஞ்சாவூர் பெரிய கோயில் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் 18 நாள்கள் வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி, கடந்த மார்ச் மாதம் 30 - ம் தேதி சித்திரைத் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதற்காகக் கோயில் வளாகம் முழுவதும் மின் அலங்காரம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோயிலில் காலை, மாலை என இரு வேளைகளில் சுவாமி புறப்பாடுகள் நடைபெற்றன. இந்த நிகழ்விலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பக்தர்கள் கூட்டம்

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், இன்று நடை பெற்றது. 3 அடுக்குகள்,16.5 அடி உயரம் கொண்ட தேர் முழுவதும், 30 அடி உயரத்துக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திருதேரில் தியாகராஜர்– கமலாம்பாள் எழுந்தருளினர். காலை 6.30 மணிக்கு மேல் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தேரை வடம் பிடித்து இழுத்துத் துவக்கி வைத்தார். முன்னதாக அதிகாலை 5:45 மணிக்குப் பெரிய கோயிலில் இருந்து ஸ்ரீதியாகராஜர், கமலாம்பாள், ஸ்கந்தர் புறப்பாடும், முத்துமணி அலங்கார சப்பரத்தில் பஞ்ச மூர்த்திகளும் புறப்பட்டு வரிசையாக மேல ராஜவீதியில் உள்ள தேர் மண்டபப் பகுதியை அடைந்தன்ர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கொரோனா பரவல் காரணமாக, தேரோட்டம் நடைபெற வில்லை. இந்நிலையில் இன்று நடைபெற்ற தேரோட்டத்தில் ஆண்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து கலந்து கொண்டதுடன் உற்சாகமாகத் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். அஸ்திர தேவர், விநாயகர், சுப்பிரமணியர் சப்பரங்கள் முன்னே செல்ல, தேருக்கு பின்னால், நீலோத்பலாம்பாள், சண்டீகேசுவரர் சப்பரங்கள் சென்றன.

தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம்

தேருக்கு முன்பாகப் பெண்கள் முளைப்பாரி எடுத்துச் சென்றனர். மேலும் கோலாட்டம், தப்பாட்டமும் ஆடிச் சென்றனர். ஆங்காங்ககே சிவ வாத்தியங்கள் முழங்கப்பட்டன. தேரோடும் நான்கு வீதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டிருந்தன. தடையின்றித் தேர் செல்வதற்கு வசதியாகப் புதிய தார்ச்சாலை போடப்பட்டிருந்தன. குடும்பம் குடும்பமாக வந்த பக்தர்கள் ஆருரா, நமச்சிவாயா, தேனாரமுதா, பெருவுடையாரே என கோஷங்கள் முழங்கத் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். இதனால் தஞ்சாவூர் நகரம் முழுவதும் உற்சாகத்துடன் காணப்பட்டது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/P8Uq4e2
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*