கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கண்டமங்கலம் ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு நேற்று மதியம் 12 மணியளவில் கிராமசபை கூட்டம் நடைப்பெற்றது. சிறப்பு அழைப்பாளராக காட்டுமன்னார்கோவில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் சிவகாசி கலியமூர்த்தி, ஊராட்சி செயலர் சங்கர் மற்றும் வேளாண்துறை அலுவலர்கள் என சுமார் 300 பேர் கலந்து கொண்ட அந்த கூட்டத்தில் ஊராட்சியின் வளர்ச்சி திட்ட பணிகள், பொதுமக்கள் கோரிக்கை போன்றவை விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து விவசாயத்திற்கான கடன்கள் குறித்த விபரங்களை தெரிவித்த வேளாண்துறை அதிகாரிகள், விவசாயிகளுக்கு அடையாளை அட்டைகளை வழங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த கூட்டத்திலிருந்து எழுந்த ஊராட்சி துணைத் தலைவர் சரண்யா குமார், கிராம மக்கள், அரசு அதிகாரிகள் முன்னிலையில் தனது காலில் அணிந்திருந்த செருப்பை கழற்றி அங்கிருந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரனை அடித்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த இந்த சம்பவத்தால் கிராம மக்கள் அதிர்ச்சியாகி நிற்க, அங்கிருந்து வெளியேற முயன்றார் துணைத் தலைவர் சரண்யா குமார்.
ஆனால் அதற்குள் சுதாரித்துக் கொண்ட கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் கதவுகளை இழுத்து மூடி அவரை சிறைப் பிடித்ததுடன், காட்டுமன்னார்கோவில் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அதையடுத்து அங்கு சென்ற சேத்தியாத்தோப்பு சரக காவல் டி.எஸ்.பி சுந்தரம் உள்ளிட்ட போலீஸார், பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதேசமயம் துணை வட்டார வளர்ச்சி அலுவலரை தாக்கிய ஊராட்சி துணைத் தலைவரை உடனடியாக கைது செய்ய வேண்டுமென்று, கண்டமங்கலம் கிராம மக்களும், ஊராட்சி மன்ற ஊழியர்களும் சிதம்பரம் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்தனர். அதையடுத்து சரண்யா குமாரை அங்கிருந்து அழைத்துச் சென்ற போலீஸார், காவல் நிலையத்தில் அவரிடம் விசாரணையை மேற்கொண்டனர்.
பாதிக்கப்பட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமச்சந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில், அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்தல், பொதுமக்கள் முன்னிலையில் தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீஸார் சரண்யா குமாரை கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்துப் பேசிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், ``கடந்த மார்ச் 7-ம் தேதி நடைப்பெற்ற கூட்டத்தில், துணைத் தலைவர் சரண்யா குமார் ஊராட்சி நிர்வாகத்திற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதுகுறித்து நான் விசாரித்துக் கொண்டிருந்தபோது யாருக்கும் தெரியாமல் அதை தனது செல்போனில் வீடியோ எடுத்தார்.
இவரின் கணவர் ஊராட்சி தொடர்பாக ஏற்கெனவே அவதூறு வீடியோவை சமூக வலைத்தளத்தில் பரப்பி விட்டவர். மறுபடியும் அதேபோல நடந்துவிடக் கூடாது என்பதால் அங்கிருந்த ஊழியர்கள், வார்டு உறுப்பினர்கள் முன்னிலையில் அவரை எச்சரித்துவிட்டு சென்றுவிட்டேன். அதை மனதில் வைத்துக்கொண்டு அனைவரின் முன்னிலையிலும் என்னை பழிவாங்கும் எண்ணத்தில் காத்திருந்து தற்போது செருப்பால் அடித்துவிட்டார்” என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/tvEoqWu
via
