கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, கடலூர் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ அய்யப்பனை கடந்த மார்ச் மாதம் சஸ்பெண்ட் செய்தது அந்தக் கட்சித் தலைமை. தொடர்ந்து அவர் பா.ஜ.க-வில் இணையப்போவதாக தகவல் வெளியானது. அதையடுத்து, கடந்த ஜூலை மாதம் கட்சியில் இணைத்துக் கொண்டது தி.மு.க. இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 35 ஊராட்சி மன்றத் தலைவர்கள் பா.ஜ.க-வில் இணைந்திருப்பதாக அந்தக் கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.
இது தொடர்பாக கடந்த 5-ம் அவர் பெயரில் வெளியான செய்திக் குறிப்பில், ``தி.மு.க அரசின் அராஜக போக்கால், நம்முடைய மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் எண்ணம் மற்றும் செயல்கள் மூலம் ஈர்க்கப்பட்டு, நேற்று (04.08.2022) கமலாலயத்தில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 35 ஊராட்சி மன்றத் தலைவர்கள், உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு மாநிலத் தலைவர் சோழன் பழனிசாமி (Ex-MLA) அவர்கள் முன்னிலையில் தங்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக்கொண்டனர்.
அப்போது கடலூர் கிழக்கு மாவட்டத் தலைவர் மணிகண்டன் அவர்கள் உடன் இருந்தார். 04.07.2022 அன்று கடலூர் மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டிய கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவர்கள் தீர்மானம் மூலம் நிறைவேற்ற முயன்ற பிரச்னைகள் அனைத்துக்கும் தி.மு.க அரசின் கீழ் செயல்படும் அரசு இயந்திரங்களில் இருக்கும் கோளாறு, ஊழல் மற்றும் முறைகேடுகள்தான் காரணம். மத்திய அரசின் திட்டங்களான பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டத்தை செயல்படுவதில் சிக்கல்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ஊராட்சி மன்றங்களுக்கு 2021-22-ம் ஆண்டில் விடுவிக்கப்பட வேண்டிய நிதிகூட விடுவிக்காததால் கடலூரில் அமைந்திருக்கும் பல ஊராட்சி மன்றங்கள் நிதி நெருக்கடியில் உள்ளன. தி.மு.க அரசு இந்த ஊராட்சி மன்றங்களுக்கு அளிக்கும் நெருக்கடியை எதிர்கொள்ள தமிழ்நாடு பா.ஜ.க பக்கபலமாக இருக்கும்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வழியில் ஊழலற்ற நல்லாட்சியை உள்ளாட்சியில் அளித்திட பாரதிய ஜனதா கட்சியில் இணைந்திருக்கும் 35 ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கும் என்னுடைய பரிபூரண வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகிகள் சிலர், “வாய்க்கு வந்த பொய்களையெல்லாம் அவிழ்த்துவிட்டு வருகிறார் அண்ணாமலை.
100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் ஊராட்சித் தலைவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்றும், தாங்கள் அனுப்பும் திட்டங்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிப்பதில்லை என்றும் தங்கள் கோரிக்கையை மனுவாக எழுதி பா.ஜ.க தலைவர் அண்ணாமலையிடம் கொடுத்திருக்கிறார்கள் ஊராட்சி மன்றத் தலைவர்கள். அவர்கள் அனைவருமே அ.தி.மு.க-பா.ஜ.க கட்சிகளைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள். அதைத்தான் அண்ணாமலை இப்படி அடித்து விட்டிருக்கிறார்” என்கின்றனர்.
இது குறித்து விளக்கம் கேட்க கடலூர் பா.ஜ.க-வின் கிழக்கு மாவட்டத் தலைவர் மணிகண்டனைத் தொடர்பு கொண்டபோது நம் அழைப்பை அவர் ஏற்கவில்லை. வாட்ஸ்-அப் மூலம் குறுந்தகவல் அனுப்பியும் அவரிடமிருந்து பதில் வரவில்லை. அவர் பதிலளிக்கும் பட்சத்தில் அதை உரியப் பரிசீலனைக்குப் பின்னர் பதிவிடத் தயாராக இருக்கிறோம்.
அவரையடுத்து பா.ஜ.க ஊடகப் பிரிவின் மாநிலச் செயலாளர் ஸ்ரீதரை தொடர்புகொண்டு, கட்சியில் இணைந்த 35 ஊராட்சி தலைவர்களின் பட்டியலைக் கேட்டோம். “என்னிடம் அந்தத் தகவல் இல்லை. வாங்கித் தருகிறேன்” என்றார். மீண்டும் அவரை தொடர்புகொண்டபோது, “மாவட்டத் தலைவர் பிஸியாக இருக்கிறார். அவர் அனுப்பியதும் உங்களுக்கு அனுப்புகிறேன்” என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/h1OFH3g
via
