கடலூர் கேப்பர் மலையில் அமைந்திருக்கும் மத்திய சிறையில் விசாரணை, தண்டனை என சுமார் 800 கைதிகள் இருக்கின்றனர். அங்கு துணை சிறைத்துறை அதிகாரியாகப் பணியாற்றும் மணிகண்டன் என்பவர், மத்திய சிறைக்கு எதிரில் இருக்கும் சிறை அதிகாரிகள் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த ஒரு வாரமாக மருத்துவ விடுப்பு எடுத்திருந்த மணிகண்டன், தனது சொந்த ஊரான கும்பகோணத்தை அடுத்திருக்கும் சுவாமிமலைக்குச் சென்றிருந்தார். அதனால் வீட்டில் அவர் பெற்றோரும், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் மட்டும் இருந்தனர். இந்த நிலையில், கடந்த 27-ம் தேதி இரவு உணவு முடிந்தபின்னர் அனைவரும் தூங்கச் சென்றிருக்கின்றனர்.
அதிகாலை 3 மணியளவில் மணிகண்டனின் தாய் இயற்கை உபாதைக்காக எழுந்தார். அப்போது சமையலறை தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்த நேரத்தில், சிலர் தப்பியோடுவதையும் பார்த்திருக்கிறார். அதைப் பார்த்து அவர் போட்ட கூச்சலில் ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், சமையலறையில் பற்றிய தீயை அணைக்க முயற்சி செய்தனர். அதற்குள் தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். அதையடுத்து சிறைத்துறை அதிகாரிகளும், முதுநகர் காவல்துறை இன்ஸ்பெக்டர் உதயகுமாரும் அங்கு சென்று ஆய்வு செய்தபோது, காலி பெட்ரோல் பாட்டில்கள் கிடந்திருக்கின்றன. அதையடுத்துதான் சிறை அதிகாரிகளுக்கு சிறையில் இருக்கும் எண்ணூர் தனசேகரன்மீது சந்தேகம் எழுந்திருக்கிறது. கடலூர் மத்திய சிறையில் இருக்கும் விசாரணை கைதிகளில் ஒருவர் எண்ணூர் தனசேகரன்.
இவர்மீது 7 கொலை வழக்குகள் உட்பட கொலை முயற்சி, தொழிலதிபர்களை மிரட்டிப் பணம் பறிப்பது என சுமார் 50 வழக்குகள் இருக்கின்றன. மூன்று முறை குண்டாஸ் வழக்கிலும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தனசேகரனை, சிறை விதிகளை மீறியதற்காக கடலூர் சிறைக்கு மாற்றியது தமிழ்நாடு சிறைத்துறை. கஞ்சா புழக்கம், செல்போன் உரையாடல் போன்றவற்றை தடுப்பதற்காக, அதிகாரிகள் அவ்வப்போது சிறைக்குள் திடீர் ஆய்வுகளை மேற்கொள்வது வழக்கம். அப்படி ஆகஸ்ட் 8-ம் தேதி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் எண்ணூர் தனசேகரனிடமிருந்து செல்போனைப் பறிமுதல் செய்திருக்கிறார் துணை சிறை அதிகாரி மணிகண்டன். அப்போது கைதி தனசேகரனுக்கும், அதிகாரி மணிகண்டனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதுதான் தற்போது நடந்த சம்பவத்தின் பின்னணி என்கின்றனர் விசாரணை அதிகாரிகள்.
இந்தச் சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய விசாரணை அதிகாரிகளில் ஒருவர், “செல்போனை பறிமுதல் செய்தபோதே, மணிகண்டனை மிரட்டியிருக்கிறார் தனசேகரன். ஆனால் துணிச்சல் நிறைந்த அதிகாரியான மணிகண்டன், அதனை கண்டுகொள்ளவில்லை. சிறைக் கைதிகள் மத்தியில் தன்னை ஒரு தாதாவாக காட்டிக்கொண்ட தனசேகரன், அவர்கள் முன் அதிகாரிகள் மிரட்டியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ’ரௌடின்னா போலீஸுக்கு பயம் இருக்கணும். அந்த பயத்தை நான் காட்டுகிறேன்’ என்று சிறை வார்டன்களிடம் சவால் விட்டிருக்கிறார் தனசேகரன். அவர்கள் முன்பும், சக கைதிகளிடமும் பந்தா காட்ட வேண்டும் என்பதாலும், மணிகண்டனை குடும்பத்துடன் தீர்த்துக்கட்ட கூலிப்படையை அனுப்பியிருக்கிறார்” என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/4Zt9fPa
via
