திருட்டு வாகனத்துக்கு பெயர் மாற்றம் செய்து கொடுத்த ஆர்.டி.ஓ அலுவலகம்! – கடலூர் அதிர்ச்சி

0

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த அமுதராஜ் என்பவரது பல்சர் வாகனம், கடந்த செப்டம்பர் 6-ம் தேதி காணாமல் போனது. அதிர்ச்சியடைந்த அமுதராஜ், வாகனம் காணாமல் போன அன்றே அது குறித்து குமரன் நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். காவல் நிலையத்தில் இழுத்தடிக்க, இணையத்தில் தனது வாகன பதிவெண்ணை போட்டு சாதாரணமாக தேடியிருக்கிறார் அமுதராஜ். அப்போது காணாமல் போன தனது இருசக்கர வாகனம், கடலூர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் வேறொருவர் பெயருக்கு மாற்றம் செய்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்து மீண்டும் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்.

அமுதராஜ்

இது குறித்துப் பேசிய அமுதராஜ், “வண்டி திருடுபோன அன்றே R6 குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து சி.எஸ்.ஆரும் வாங்கிவிட்டேன். ஆனால் என் வண்டியை கண்டுபிடிப்பதற்கு அவர்கள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அதனால் எனது வண்டியின் எண்ணை இணையத்தில் போட்டு பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது சென்னையில் திருடு போன எனது வண்டி, கடலூர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் வேறொருவர் பெயருக்கு மாற்றப்பட்டிருப்பது தெரிந்தது. உடனே கே.கே.நகர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் அது தொடர்பான விபரங்களை வாங்கிக்கொண்டு, குமரன் நகர் காவல் நிலையத்தில் கொடுத்து என் வண்டியை மீட்டுத் தரும்படி கூறினேன். அதேநேரத்தில் கடலூர் ஆர்.டி.ஓ அலுவலகத்தை தொடர்புகொண்டு கேட்டபோது அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை.

ஆர்.சி புக் உள்ளிட்ட வண்டியின் உண்மையான சான்றிதழ்கள் என்னிடம் இருக்கும்போது, எனது கையெழுத்தின்றி ஒரு திருட்டு வண்டிக்கு முறையாக பெயர் மாற்றம் செய்து கொடுத்திருக்கிறார்கள் கடலூர் ஆர்.டி.ஓ அதிகாரிகள். வாகனம் பெயர் மாற்றம் செய்யும்போது கடைப்பிடிக்கப்படும் விதிமுறைகள் எதுவுமின்றி, திருடப்பட்ட 40-வது நாளிலேயே ஆர்.டி.ஓவின் கையெழுத்துடன் பெயர் மாற்றம் செய்திருக்கிறார்கள். இது குறித்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தும், இன்னும் எஃ.ஐ.ஆர் கூட போடாமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள். இப்படி எத்தனை திருட்டு வண்டிகள் கடலூர் ஆர்.டி.ஓவில் மாற்றியிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

திருடுபோன அமுதராஜின் இருசக்கர வாகனம்

சாதாரண இன்சூரன்ஸ் செய்யும்போதுகூட வண்டியின் எண்ணை போட்டால் உரிமையாளரின் பெயர் தெரியும். ஆனால் எதையும் செய்யாமல் சாதாரணமாக பெயர் மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள். தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், எனது வண்டியை  மீட்டுத்தர வேண்டும்” என்றார்.

அமுதராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடலூர் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு வந்த குமரன் நகர் போலீஸார், திருட்டு வண்டிக்கு பெயர் மாற்றம் செய்தது தொடர்பான ஆவணங்களை எடுத்துச் சென்றிருக்கின்றனர். திருட்டு வண்டிக்கு பெயர் மாற்றம் செய்து கொடுத்த வினோத் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியின் உரிமையாளர் வினோத்திடம் பேசினோம். “விழுப்புரத்தில் பழைய வாகனங்களை வாங்கி விற்கும் ஜெயசங்கர் என்பவர், என்னிடம் வாகனங்களுக்கு பெயர் மாற்றும் வேலைகளைக் கொடுப்பார். ஒரு வாகனத்திற்கு பெயர் மாற்றம் செய்ய ரூ.1,500/- கொடுப்பார். அதில் ரூ.800/- அரசுக் கட்டணமும், மற்ற செலவுகளும் போக எனக்கு ரூ.300/- கிடைக்கும்.

அப்படி அவர் இந்த மாதம் 5 இருசக்கர வாகனங்களுக்கு பெயர் மாற்றித்தரும்படி கூறினார். அதில் நான்கு வாகனங்களுக்கு ஒரிஜினல் ஆர்.சி புத்தகமும், ஒரு வண்டியின் ஆர்.சி புத்தகம் தொலைந்துவிட்டது என்றும் சொல்லி எப்படியாவது முடித்துக் கொடுக்கும்படி கூறினார். ஆர்.சி புத்தகங்கள் தொலைவது அடிக்கடி நடக்கக் கூடியது என்பதால், ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த அமீர் அப்பாஸ் என்பவர் கடலூரில் வசிப்பது போல நோட்டரி பப்ளிக் வழக்கறிஞரிடம் அஃபிடவிட் வாங்கி பெயர் மாற்றம் செய்து கொடுத்தேன். திருட்டு வண்டி என்று தெரிந்திருந்தால் வெறும் ரூ.300/- கூலிக்காக இதை நான் செய்திருப்பேனா? இந்த வண்டி மூன்று பேரிடம் கைமாறிதான் இங்கு வந்திருக்கிறது. மதுராந்தகத்தைச் சேர்ந்த தீபக் என்பவர்தான் இதில் முக்கியமானவர். சென்னை கமிஷனர் அலுவலகத்தில் என்னை அழைத்து விசாரணை செய்துவிட்டு நேற்றுதான் அனுப்பினார்கள்” என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/i78DMVb
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*