
அமெரிக்காவின் அதிபர் தேர்தல் 2021 -ம் ஆண்டு நடந்து முடிந்த நிலையில், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். டொனால்டு ட்ரம்ப் தோல்வியடைந்தார். அதைத் தொடர்ந்து, தன் தோல்வியை ஏற்றுக்கொள்ளாத டொனால்டு டிரம்ப், இந்த வெற்றியை ஏற்று சான்றிதழ் தராமல் தேர்தல் முடிவுகளை நிராகரிக்கும்படி துணை அதிபர் மைக் பென்சை (Mike Pence) வலியுறுத்தி வந்ததாக கூறப்பட்டது.
ஆனாலும், அதிபர் தேர்தல் முடிவுகளை உறுதி செய்வதற்காக நாடாளுமன்றக் கூட்டம் நடந்துக் கொண்டிருந்தது. அப்போது டொனால்டு ட்ரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றம் கூடும் கேப்பிடல் கட்டடத்துக்குள் (Capitol Building) புகுந்தனர். இதில்,100-க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர். 1,000 க்கும் மேற்பட்ட கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. 4 பேர் மரணமடைந்தனர் எனச் சொல்லப்படுகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணை அமெரிக்க நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த நிலையில், வாஷிங்டனின் தலைமை நீதிபதி ஜேம்ஸ் போஸ்பெர்க், "முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீதான குற்றத்தை விசாரிக்கும் போது, பெடரல் கிராண்ட் ஜூரி குழு கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் பதிலளிக்க வேண்டும். இருவருக்குமான உரையாடல்கள் குறித்து விளக்கமளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டிருக்கிறார்.
ஏற்கெனவே டொனால்டு ட்ரம்ப் ஆபாச பட நடிகையுடன் நெருக்கமாக இருக்க பணம் கொடுத்த விவகாரத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுவரும் நிலையில், அடுத்த வழக்கின் விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டிருப்பது அமெரிக்க அரசியலை பரபரப்பாக்கி இருக்கிறது.
from விகடன்
umn news
