கோவை மாவட்டத்துக்கும், இயற்கைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் இருப்பதால் பசுமை போர்வையுடன் காட்சியளிக்கும் கோவை. ஆனால், கடந்த சில தசாப்தங்களாக ஏற்பட்ட மாற்றங்களால் பசுமை போர்வை ஆங்காங்கே கான்கிரீட் காடுகளாக மாறியது. யானை – மனித எதிர்கொள்ளல் மிகப்பெரிய பிரச்னையாக வெடித்தது.
ஹாகா விதிமீறல், யானை வழித்தட ஆக்கிரமிப்பு போன்ற பிரச்னைகளுக்கு நீண்ட ஆண்டுகளாக தீர்வு கொடுக்க முடியாமல் இருந்தது. இந்நிலையில், கோவை மாவட்ட வனப்பகுதியில் கூடுதலாக 1049.73 ஹெடேர் நிலம் சேர்த்து மாவட்ட ஆட்சியர் நாகராஜன் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு வனச் சட்டத்தின் கீழ் வருவாய் மற்றும் வனத்துறைக்கு சொந்தமான, சுமார் 1049 ஹெக்டேர் நிலங்களை, வன நிலங்களாக அறிவித்துள்ளார். அதேபோல, 1949-ம் ஆண்டு தமிழ்நாடு தனியார் நிலங்கள் பேணுகை சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட, மாநிலத்தின் முதல் யானைகள் வலசைப்பாதையான, கல்லார் வலசைப் பாதையை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Also Read: கோவை: `ரயில் விபத்திலிருந்து யானைகளைக் காக்க இதுதான் வழி!' - சமூக ஆர்வலரின் ஆலோசனை
அதன்படி, அங்கு வனத்துக்கு நடுவே அமைந்து இருக்கும் சுமார் 50.79 ஹெக்டேர் தனியார் நிலங்களை தனியார் வனமாக அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டத்தின் வனப்பரப்பு 1,22,215.13 ஹெக்டேராக இருந்தது. தற்போதைய உத்தரவின் மூலம் கோவை மாவட்ட வனப்பரப்பு 1,23,264. 87 ஹெக்டேராக அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளனர். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ஒரு மாதத்துக்குள் எடுக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கையை பாராட்டி, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அவருக்கு புத்தகம் வழங்கினார்.
இந்த நீண்ட கால பிரச்னைக்கு ஆக்கபூர்வமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் வனத்துறைக்கு சுற்றுசூழல் ஆர்வலர்களும், பொது மக்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3griMh5
via
