‘பசிக்கிறது வயிறு’ என்ற வார்த்தையைத் திரும்பிய பக்கமெல்லாம் கேட்கச் செய்துவிட்டது, கொரோனா ஊரடங்கு. ‘மெலிந்துப்போன உடல்; அதனுள் ஓரமாய் ஒட்டிக்கிடக்கும் குடல்’ என பசியால் துடிக்க மறுக்கிறது, ஏழைகளின் இதயம். ‘அடகு கடைகளையாவது திறந்துவிடுங்கள்; பிள்ளைகள் பசிதாங்க மாட்டார்கள்’ என்று அன்றாட கூலித் தொழிலாளர்களும் இரைப்பையின் கதறலுடன் கரைகிறார்கள். ஊரடங்கில், இப்படி துயரப்படும் மக்களைத் தேடிப்போய் உதவிக்கரம் நீட்டி உணவளித்து வருகிறார்கள் சிலர்.
அந்த வகையில், இளைஞர்கள் பலரிடமும் மனிதம் துளிர்விட்டிருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையிலுள்ள வெங்கடதாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இணைந்து ஆதரவற்றவர்கள், முதியவர்கள், ஏழை மக்கள் என 200 பேருக்குத் தினமும் உணவளித்து வருகிறார்கள். அந்த இளைஞர்களே உணவினை சமைத்து பொட்டலங்களில் கட்டி அதனுடன் வாட்டர் பாட்டிலையும் சேர்த்து வழங்குகிறார்கள்.
இந்த நிலையில், ஊத்தங்கரை அருகேயுள்ள காட்டேரி என்ற பகுதியில், நாற்பதுக்கும் மேற்பட்ட நாடோடியின மக்கள் வறுமையில் வாடுவதையறிந்த வெங்கடதாம்பட்டி இளைஞர்கள், நேரடியாக அவர்களது பகுதிக்கே சென்று அனைவருக்கும் உணவு வழங்கியிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி, அந்த நாடோடியின மக்கள் படும் துயரத்தையும் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொண்டு வந்து ஆட்சியாளர்களிடம் உதவி கோரியிருக்கிறார்கள்.
நாடோடியின மக்கள் கூறுகையில், ‘‘கொரோனா ஊரடங்குக் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறோம். யாருமே எங்கள் பகுதியை எட்டிப் பார்க்கவில்லை. வெங்கடதாம்பட்டி கிராமத்து இளைஞர்கள்தான் முதல் முறையாக எங்களைத் தேடி வந்து உதவியிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றிச் சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்’’ என்றனர்.
வெங்கடதாம்பட்டி கிராம இளைஞர்களின் இந்த துயர்த் துடைக்கும் செயலை, ஊத்தங்கரைப் பகுதியிலுள்ள பல்வேறு தரப்பினரும் வெகுவாகப் பாராட்டி வருகிறார்கள்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3x2akM1
via
