கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டையை அடுத்த செல்லங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அந்த முதியவருக்கு வயது 70. இவரது மகள் ராணிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் (பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன) இருபது ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைப்பெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றன. பெண் குழந்தை பிறந்தபோது ராணி உயிரிழந்துவிட, ரமேஷ் பெங்களுருவில் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு அங்கேயே தங்கிவிட்டார்.
அதனால் இரண்டு குழந்தைகளையும் முதியவர்களான ராணியின் பெற்றோர்களே வளர்த்து வந்தனர். (தற்போது அந்த சிறுவனின் வயது 16, சிறுமியின் வயது 15) சில ஆண்டுகளுக்கு முன்பு மூதாட்டியும் இறந்துவிட முதியவர் பராமரிப்பிலேயே இருவரும் வளர்ந்திருக்கின்றனர். இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக, மிரட்டி தனது பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார். அதனால் அந்த சிறுமி 7 மாதம் கர்ப்பமாகியிருக்கிறார். அது வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக சிறுமியை மாதக்கணக்கில் வீட்டைவிட்டு வெளியே அனுப்பாமல் வைத்திருக்கிறார் முதியவர்.
சிறுமியின் வயிறு பெரிதாகிவிட்டதால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த 65 வயதான இந்திராணி என்பவரின் உதவியுடன், திருக்கோவிலூர் அருகே உள்ள மணம்பூண்டி பகுதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற செவிலியரான ராஜாமணி என்பவரிடம் கருக்கலைப்பு செய்வதற்காக சென்றிருக்கிறார்.
ஏழு மாதத்தில் கருக்கலைப்பு செய்ய முடியாது என்பதால் ஊசி மூலம் கட்டாய பிரசவம் செய்து குழந்தையை கொலை செய்யும் முடிவை எடுத்திருக்கின்றனர். ஆனால் பிரசவத்தின் போது பிறந்த பெண் குழந்தை சிறிது நேரம் அழுது இறந்துவிட்டது என்றும் அதனால் குழந்தையின் சடலத்தை ஆற்றோரம் வீசிவிட்டதாகவும் காவல்துறையிடம் தெரிவித்திருக்கிறார் மூதாட்டியான இந்திரானி, இந்த சட்டவிரோத கருக்கலைப்புக்காக 15,000 ரூபாய் கொடுத்திருக்கிறார் அந்த முதியவர்.
இந்த தகவல் செல்லங்குப்பம் கிராமத்தில் கசியத் தொடங்கியதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் விமல் தாமாக முன்வந்து திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரின் அடிப்படையில் உடனடியாக களமிறங்கிய அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் இளவழகி, அந்த முதியவர், அவருக்கு துணையாக இருந்த இந்திராணி, சிறுமிக்கு சட்டவிரோத கருக்கலைப்பை செய்த ஓய்வு பெற்ற செவிலியர் ராஜாமணி உள்ளிட்ட மூவர் மீது போக்சோ உள்ளிட்ட நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்திருக்கின்றனர்.
Also Read: நாமக்கல்: 2 சிறுமிகள்... 6 மாதமாக பாலியல் வன்கொடுமை! 75 வயது முதியவர் உட்பட 7 பேர் கைது
இதுகுறித்து நம்மிடம் பேசிய அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் இளவழகி, “அந்த சிறுமியின் பெற்றோர்களும், ஆயாவும் இல்லாதது அந்த முதியவருக்கு வசதியாக போய்விட்டது. பிஸ்கட், மிக்ஸர் உள்ளிட்ட தின்பண்டங்கள் வாங்கித் தருவதாக கூறியே சிறுமியை மூன்று ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் அந்த முதியவர், சிறுமியின் 16 வயது சகோதரனை வெளியில் படுக்கும்படி தகராறு செய்திருக்கிறார். அதனால் ஒருகட்டத்தில் அந்த சிறுவனும் இரவு சாப்பிட்டுவிட்டு வெளியில் படுக்கச் சென்றுவிடுவான். இது முதியவருக்கு வசதியாகப் போய்விட்டது. இதனை வெளியில் யாரிடமும் சொல்லக் கூடாது என தாத்தா மிரட்டியதால் எதுவுமறியாத சிறுமியும் அமைதியாக இருந்திருக்கிறார்” என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3jfTHam
via
