``விதைகள் பரவலாக்கம்தான் இலக்கு; விற்பனை அல்ல!" - ஆரோவில்லில் களைகட்டிய விதைத் திருவிழா

0

ஆரோவில்லைச் சேர்ந்த `நீடித்த வாழுமைக்கான நிறுவனம்’ தமிழக அரசுடன் இணைந்து இயற்கை விவசாயத்தை மையப்படுத்தி செயல்பட்டு வரும் நிறுவனம். ஆரோவில், கோட்டக்கரையில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் ஆகஸ்ட் 7-ம் தேதி விவசாயிகளை சிறப்பு விருந்தினர்களாகக் கொண்டு விதை பரவலாக்கத் திருவிழாவை நடத்தியது.

தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த இயற்கை விவசாய முன்னோடிகள், ஆளுமைகள் கலந்துகொண்ட இந்த விழாவில் 25-க்கும் மேற்பட்ட நெல் ரக விதைகள், 60-க்கும் மேற்பட்ட காய்கறி ரகங்கள் மற்றும் சிறுதானிய விதைகள், வாழை, கிழங்கு ரகங்கள், மரக் கன்றுகள், விவசாயம், இயற்கை குறித்த புத்தகங்கள், பருத்தியால் நெய்யப்பட்ட ஆடைகள் போன்றவை காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன.

பாரம்பர்ய விதைகள்

Also Read: 156 நெல் ரகங்கள்... விதைத் தூய்மை காக்க ஒரு முயற்சி!

செடி தம்பட்டை, செடி பீன்ஸ், செடி அவரை, கோழி அவரை, நீள சுரை, கொடி பசை, குட்டை புடலை, ஊசி வெண்டை, மலை வெண்டை, பருமன் வெண்டை, பொம்மிடி வெண்டை, தொப்பி கத்திரி, வெளிர் பச்சை கத்திரி, கருநீள ஊதா கத்திரி, காராமணி, மஞ்சள் மக்காச்சோளம் என நீள்கிறது விதைகளின் பட்டியல். இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், அதில் செய்யப்பட்ட தின்பண்டங்கள், மூலிகைத் தாவரங்கள், மூலிகை மருந்துகள், குதிரைவாலி, சாமை, தினை உள்ளிட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட சிறுதானிய ரகங்கள் போன்றவற்றை அவற்றின் உற்பத்தியாளர்களே விற்பனைக்கு வைத்திருந்தார்கள். திருவிழாவுக்கு வருகை தந்திருந்த விவசாயிகளும் பொதுமக்களும் காய்கறி, நெல் மற்றும் சிறுதானிய விதைகள் போன்றவற்றை ஆர்வமுடன் வாங்கிச் செல்வதைக் காண முடிந்தது.

அதேபோல இயற்கை விவசாயத்தின் மீது ஆர்வமுள்ள இளைஞர்களும், அவர்களுக்கு நிகராக அயல்நாட்டவர்களும் அதிகமாகக் கலந்துகொண்டனர். குறிப்பாக, அயல்நாட்டவர்கள் நம்முடைய பாரம்பர்ய நெல் ரகங்களின் விதைகளை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். தமிழகத்தின் பல்வேறு மூலைகளில் இருந்து வருகை தந்திருந்த விதை சேகரிப்பாளர்கள் பண்டமாற்று முறையில் விதைகளைத் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டதுடன், பொதுமக்களுக்கும் விநியோகித்தனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய நீடித்த வாழுமைக்கான நிறுவனத்தின் ஊழியரும், விதைகள் பரவலாக்கத் திருவிழாவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான சத்யாராஜ், ``தமிழ்நாடு அரசும், ஆரோவில் நிர்வாகமும் இணைந்து செயல்படுத்தும் நிறுவனம்தான் இந்த நீடித்த வாழுமைக்கான நிறுவனம்.

சத்யராஜ்

இந்த இந்நிறுவனத்தின் மூலம் நடத்தப்படும் நான்காம் ஆண்டு விதைத் திருவிழா இது. இந்த விதைத் திருவிழாவில் கலந்து கொள்ளும் விவசாயிகளிடமும், அவர்கள் அமைக்கும் ஸ்டால்களுக்கும் எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. அதேபோல அவர்களுக்கான உணவும் இலவசமாகவே வழங்குகிறோம். தமிழகம் முழுக்க இருக்கும் இயற்கை விவசாயிகள், விதை சேகரிப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்து அவர்களிடம் இருக்கும் விதைகளைப் பரவலாக்கம் செய்கிறோம். விற்பனை செய்வது இரண்டாம் கட்டம்தான்.

ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பட்டத்தை முன்னிட்டு நடக்கும் இந்தத் திருவிழா, இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாகத் தாமதமாக ஒரு வாரம் கடந்து நடக்கிறது. விழுப்புரம், திருவண்ணாமலை, புதுச்சேரியைச் சேர்ந்த மக்களும், விவசாயிகளும் பயன்பெறுவதற்காக இந்தத் திருவிழாவை தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

விதைத் திருவிழா

Also Read: சிறப்பான லாபம் தரும் சிறுதானியக் கருத்தரங்கு & விதைத் திருவிழா!

நேற்று மட்டும் சுமார் 15-லிருந்து 20 வகையான பாரம்பர்ய நெல் ரகங்களின் விதைகள் விற்றிருக்கின்றன. கத்திரி, வெண்டை, சுரை என காய்கறிகளில் மட்டும் 60 ரக விதைகள் விற்றிருக்கின்றன. இந்த விழாவில் சிறப்பு நிகழ்வாக விதைப் பூங்கா ஒன்றை திறந்திருக்கிறோம். அந்தப் பூங்காவில் விளைவிக்கப்படும் எந்தவித காய்கறிகளையுமே அறுவடை செய்யாமல் விதைக்காக விடப்படும். அவற்றிலிருந்து விதைகளைச் சேகரித்து விவசாயிகளுக்கு கொடுக்க இருக்கிறோம்” என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3CvcqHF
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*