சென்னை, கொளத்தூரைச் சேர்ந்தவர் விஜயன். கடந்த 2-ம் தேதி திண்டுக்கல் மாவட்டம் லட்சுமிபுரம் டோல்கேட்டில் சைரன் வைத்த கார் ஒன்று வந்தது. காருக்குள் இருந்த விஜயன், தன்னை ’சென்னை போலீஸ் கமிஷனர்’ எனச் சொல்லியுள்ளார். அவரது அடையாள அட்டையைப் பார்த்தபோது அது போலி அடையாள அட்டை என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரைப் பட்டிவீரன்பட்டி போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து போலி ஐ.டி., கார்டு, சைரன் வைத்த கார், ஒரு கைத்துப்பாக்கி ஆகியவை கைப்பற்றபட்டது. விசாரணையில், தனது மனைவியை ஏமாற்ற போலீஸ் அதிகாரி பணியில் இருப்பது போல வேடம் போட்டதாக ஒப்புக்கொண்டார் விஜயன்.
அவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர், பெரியகுளம் சிறையில் அடைத்தனர். ’போலீஸ் அசிஸ்டென்ட் கமிஷனர்’ என்ற போர்வையில் என்னென்ன குற்றங்களில் ஈடுபட்டார் என, விசாரணை மேற்கொள்வதற்காக பட்டிவீரன்பட்டி போலீஸார், விஜயனை ஒருநாள் காவலில் எடுத்து விசாரணை செய்திட நிலக்கோட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். நிலக்கோட்டை மாஸ்திரேட் மும்தாஜ், ஒருநாள் காவலில் எடுத்து விசாரணை செய்திட உத்தரவிட்டார்.
போலி கமிஷனர் விஜயனின் ஆரம்பகால வாழ்க்கையைப் பற்றியும், போலி கமிஷனர் அவதாரத்தைப் பற்றியும் போலீஸார் தரப்பில் விசாரித்தோம், “ஆரம்பத்தில் லாரி உரிமையாளர், சிமெண்ட், இரும்புக்கம்பி வியாபாரம் என பல தொழில் செய்து ரூ.60 லட்சம் வரை நஷ்டமடைந்தார் விஜயன். இதையடுத்து சென்னையில் தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக இரண்டு ஆண்டுகள் வரை வேலை பார்த்துள்ளார். அப்போது செய்தி சேகரிக்கச் சென்ற இடத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 5 மாநிலங்களின் முன்னாள், இந்நாள் முதல்வர்கள், முன்னாள் ஆளுநர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டுள்ளார். அந்தப் படங்களையும், போலீஸ் அதிகாரி போல உடை அணிந்த படங்களையும் பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம் பலரது முகநூல் நட்பு விஜயனுக்கு கிடைத்துள்ளது. சரியான வேலை இல்லாதது, மனைவியிடம் சண்டை என தொடர் பிரச்னையால், ’குரூப்-1’ தேர்வில் வெற்றி பெற்று ’டி.எஸ்.பி’யாகத் தேர்வானதாகச் சொல்லி நம்ப வைத்துள்ளார். இதற்காக கடந்த 10 மாதங்களுக்கு முன்பு கோவையில் ஒரு ஜீப்பை வாங்கி, தன் மனைவி மற்றும் உறவினர்களிடம் தான் உளவுத்துறை மற்றும் போலீஸ் கமிஷனராக வேலை பார்ப்பதாகக் கூறி நம்ப வைத்து தமிழகம் முழுவதும் வலம் வந்துள்ளார்.
ஏற்கெனவே முதல்வர்கள், காவல்துறை அதிகாரிகளுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை விஜயன் தனது முகநூலில் பதிவிட்டதால், அந்த நட்பில் சில சினிமா பிரபலங்களும் நட்பாகப் பழகி இருந்துள்ளனர். முகநூல் நட்பில் இருந்த பெண்கள் பலரிடம் தொலைபேசி மூலம் பேசி, தனது நட்பைப் பலமாக்கிக் கொண்டுள்ளார். தனது பேச்சு சாதுரியத்தால் அப்பெண்களிடம் ’அவசரத் தேவை’ எனக் கூறி கைமாற்றாக ரூ.10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை என கிடைக்கும் பணத்தைப் பெற்றுள்ளார். அத்துடன், ஆதரவற்ற முதியவர்கள், மாணவர்களுக்கு உதவுவதாகச் சொல்லி நண்பர்கள் வட்டாரத்திலும் பணம் பெற்றுள்ளார். ’மாதச் சம்பளம்’ என, தனது மனைவி சரிதாவுக்கு அனுப்பியது போக மீதி பணத்தை வைத்து கொண்டு ஊர் ஊராக சுற்றி வந்துள்ளார் விஜயன். நுனிநாக்கில் விளையாடும் ஆங்கிலப் பேச்சால் போகுமிடமெல்லாம் போலீஸ் மரியாதை, தங்குவதற்கு ஓசி-யில் நட்சத்திர விடுதிகள், வகை வகையான சாப்பாடு.. என கடந்த நான்கு மாதங்களாக வாழ்க்கையை ஜாலியாக அனுபவித்து வந்துள்ளார் விஜயன்.
பணம் கொடுத்த முகநூல் நண்பர்களையும், தனது மனைவியும் சமாளிக்க பல்வேறு இடங்களுக்குச் சென்று வாகன சோதனை என்ற பெயரில் அங்கிருந்து புகைப்படங்களை எடுத்து அனுப்பி, தான் பிசியான காவல்துறை பணியில் இருப்பது போல் காட்டி வந்துள்ளார் விஜயன். கடலூரில் ஆன்லைன் பிசினஸில் சிமெண்ட், கம்பி வாங்கித் தருவதாக கூறி ரூ.3 லட்சம் பணத்தை ஏமாற்றி இருப்பதாக ஒருவர் மட்டுமே புகார் அளித்துள்ளார். அவரிடம், முகநூல் நட்பில் பணம் கொடுத்து ஏமாந்த பெண்கள் யாரும் இதுவரை புகார் அளிக்கவில்லை. புகார் அளிக்கப்படும் பட்சத்தில் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர். விஜயன் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களில் விஜயன் முகநூல் பக்கத்திலிருந்து வெளியேறிய 30-க்கும் மேற்பட்ட பெண்கள், விஜயனின் முகநூல் நட்பைத் துண்டித்து இருப்பதும் ஏராளமான படங்கள் அளிக்கப்பட்டு இருப்பதும் சைபர் கிரைம் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Also Read: `முகநூல் பழக்கம்.. திடீர் தற்கொலை?!’ -டி.எஸ்.பி என ஆண் குரலில் பேசிய பெண்; சிக்கிய மோசடி தம்பதி
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3jEEwrc
via
