``பரதநாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன் என்னிடம் அத்துமீறினார்!" - கரூர் இசைப்பள்ளி ஆசிரியை புகார்

0

பிரபல பரதநாட்டிய கலைஞரான ஜாகிர் உசேன், ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றம்சாட்டியது அப்போது விவாதமானது. அதனை தொடர்ந்து, தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறையில் 17 மாவட்ட அரசு இசைப்பள்ளி கலையியல் அறிவுரைஞராக நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில், அவர்மீது கரூர் மாவட்ட இசைப்பள்ளியை சேர்ந்த ஆசிரியை ஒருவர், அதிரடியாக குற்றம்சாட்டியிருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்து, அந்த பெண் ஆசிரியை, தமிழ்நாடு கலை பண்பாட்டு துறை இயக்குநர் காந்திக்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், ``நான் ஒரு பாரம்பரிய இசை குடும்பத்தைச் சேர்ந்தவர். கரூர் அரசு இசைப் பள்ளியில் பணிபுரிந்து வருகிறேன். கடந்த பிப்ரவரி மாதம், 28 - ம் தேதி கலையியல் அறிவுரைஞர் ஜாகிர் உசேன், எங்கள் பள்ளிக்கு ஆய்வுக்கு வந்திருந்தார். அப்போது, தலைமை ஆசிரியர் அழைத்து என்னை மட்டும் உள்ளே வரச்சொல்லி, கதவை மூடினார். அங்கு, என் உடல் மீது கைவைத்து, 'இப்படி நடனமாட வேண்டும்' என்று சொல்லி, மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டார். இந்த நிகழ்வு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. மேலும், ஏப்ரல் மாதம் 3 நாள் பயிலரங்கம் நடத்தப் போவதாகவும், அங்கு உங்களுக்கு எல்லாம் வகுப்பும் எடுக்க வேண்டும் எனவும் கூறி பெண் ஆசிரியைகளை தரக்குறைவாகப் பேசினார். அதன்பின், கதவை திறந்து வெளியேறிவிட்டேன்.

கரூர்

இந்த சம்பவம் மனதை வேதனைப்படுத்தியது. இதற்குபின், நாம் உயிர்வாழ வேண்டுமா என்று எண்ணி, தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றியது. நடந்த விஷயங்களை கடிதத்தின் வாயிலாக, என்ன கூற முடியுமோ அவற்றை மட்டும் தங்கள் கவனத்திற்கு பணிந்து அனுப்பியுள்ளேன்' என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்து, நாளை தமிழ்நாடு கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் காந்தி விசாரணை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து பா.ஜ.கவை சேர்ந்த வானதி சீனிவாசன் உள்ளிட்டவர்கள், கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். வானதி சீனிவாசன் தனது ஃபேஸ்புக் பதிவில், 'பரதநாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன் மீது கரூர் பெண் ஆசிரியையின் குற்றச்சாட்டு பற்றி உடனடி விசாரணை மற்றும் நடவடிக்கை தேவை. பாலியல் ரீதியான கொடுமைகளை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க கூடாது' என்று முதல்வரை டேக் செய்து குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து, ஜாகிர் உசேன் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/Xnp70MC
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*