திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்திருக்கும் தென்முடியனூர் கிராமத்தில், அறநிலையத்துறைக்குச் சொந்தமான ‘ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில்’ அமைந்திருக்கிறது. இந்தக் கோயிலுக்குள் செல்லவும், சாமியை வழிபடவும் கடந்த 80 ஆண்டுகளாக பட்டியலின மக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தடுத்துவந்தனர் அங்குள்ள மாற்றுச் சமூகத்துவர். அண்மையில் இந்த விவகாரம், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கவனத்துக்குச் சென்றிருக்கிறது.
அதையடுத்து, ‘அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில் அது; அப்படியிருக்க அனைத்துத் தரப்பு மக்களும் உள்ளே சென்று வழிபடலாம். பட்டியல் சமூக மக்களை தடுக்க யாருக்கும் உரிமைக் கிடையாது. தீண்டாமையைக் கடைப்பிடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று மாவட்ட ஆட்சியர் எச்சரித்தும், மாற்றுச் சமூக மக்கள் மசியவில்லை.
இதைத் தொடர்ந்து, ஆட்சியரே அதிரடியாகக் களத்தில் இறங்கி, தென்முடியனூர் கிராமத்துக்குச் சென்றார். பட்டியலின மக்களை தன்னுடன் அழைத்துக்கொண்டு கோயிலுக்குச் சென்றவர் ‘தீண்டாமைக்கு இங்கு இடமில்லை’ என்று கூறி பூட்டை தகர்த்தெறிந்து ‘ஆலயப் பிரவேசம்’ நடத்தினார்.
பட்டியலின மக்களும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கோயிலுக்குள் சென்று அம்மனை தரிசனம் செய்தனர். பெண்கள் பலரும் பொங்கல் வைத்து வழிபட்டனர். இந்த நிகழ்வினால், அந்த ஊருக்குள் பெரும் பதற்றமான சூழலும் காணப்படுகிறது. சமூக மோதலை தடுக்கும் வகையிலும், பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் விதமாகவும் எஸ்.பி கார்த்திகேயன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியரின், இந்த அதிரடி நடவடிக்கைக்கு பலத்தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/RoJFmUb
via
